பாடல் எண் :1365
கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.

1
பொ-ரை: நீர் பரந்துவருகின்ற காவிரியின் தென்கரையில் உள்ள திருப்பராய்த்துறையில் விரும்பி எழுந்தருளியிருக்கும் அருட்செல்வர், தம்மடியடைந்த அன்பர்கட்குப் பக்குவகாலம் வருந் துணையும் மறைந்துநின்று அருள்வர்:
பின் அக்காலம் வாய்த்தவழி, அவர்வினைகளைச் சுருக்கிக் கெடுக்குமாற்றில் வல்லவர்; செஞ்சடையிற் கங்கையை உடையார், (காலத்தில் வந்தடைந்தவர் வினைகளை மறையும்படிச் செய்பவர்; விரிந்த கங்கையைத் தம் செஞ்சடையில் சுருக்குமாற்றிலும் வல்லவர் என்றும் இணைக்கலாம்.)
கு-ரை: காலமடைந்தவர் தம்வினை கரப்பர் - காலத்தால் வந்தடைந்த அடியவர்களின் வினைகளை மறையச்செய்வர். கங்கை சுருங்குமாறு வல்லார் - பெருகிவரும் கங்கையைத் தம் சடையில் சுருக்கும் வல்லவர். பரப்புநீர் வருகாவிரி - அகன்று பரவிய தண்ணீரை உடையதாய் வருகின்ற காவிரி. இத்தலத்து அகன்ற காவிரியாய் வருதல் குறித்தது. செல்வர், இத்தலத்து இறைவர் பெயர். பராய்த்துறை, பராய் என்னும் தலமரம் பற்றிய பெயர் வழக்கு.