பாடல் எண் :1366
மூடி னார்களி யானையின் ஈருரி
பாடி னார்மறை நான்கினோ டாறங்கம்
சேட னார்தென்ப ராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டடி யேன்சென்று காண்பனே.

2
பொ-ரை: தென்பராய்த்துறையுறையும் அருட்செல்வர், செருக்குடைய யானையின் பச்சைத் தோலினால் போர்த்தித் தம் திருமேனியை மூடியவர்; வேதங்கள் நான்கினோடு, அங்கங்கள் ஆறினையும் பாடியவர்; மிக்க பெருமையை உடையவர்; அப்பெருமானைத் தேடிக்கொண்டு சென்று அடியேன் காண்பேன்.
கு-ரை: மூடினார்- போர்த்தார், களி - மதத்தால் செருக்கிய. ஈரூரி - உரித்தெடுத்த தோல். மறை நான்கினோடு ஆறங்கம் பாடினார் என்க. சேடனார் - பெரியவர்; அடியேன் தேடிக் கொண்டு சென்று காண்பன் என்க.