பாடல் எண் :1391
வல்லம் பேசி வலிசெய்மூன் றூரினைக்
கொல்லம் பேசிக் கொடுஞ்சரம் நூறினான்
புல்லம் பேசியும் பூந்துருத் திந்நகர்ச்
செல்வன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.

6
பொ-ரை: வன்மைபேசி வன்மையான கொடிய செயல்களையே செய்து திரிந்த திரிபுரங்களைக் கொல்ல எண்ணிப் பேசிக் கொடிய அம்பால் அழித்த பூந்துருத்தி நகர்ச்செல்வன் புன்மை பேசினும் அவன் திருவடிக்கீழேயே இருத்தலை எண்ணுவோம்.கு-ரை: வல்லம் - வன்மை. வலிசெய் - வன்மையான கொடிய செயல்களையே செய்கின்ற. மூன்றூர் - திரிபுரம். கொல்லம்பேசி - கொல்லுதலைக் கருத்துட்கொண்டு கொடுஞ்சரம் - கொடிய அம்பால். நூறினான் - அழித்தான். புல்லம் - புன்மை மொழிகள்.