|
பாடல் எண் :1416 | வலிந்த தோள்வலி வாளரக் கன்றனை நெருங்க நீள்வரை யூன்றுநெய்த் தானனார் புரிந்து கைந்நரம் போடிசை பாடலும் பரிந்த னைப்பணி வார்வினை பாறுமே. |
| 10 | பொ-ரை: வலிமை பெற்ற தோளாற்றல் உடைய இராவணனை நீண்டவரை நெருங்கும்படித் திருவிரலையூன்றிய திருநெய்த்தானனாரை விரும்பி கைநரம்புகளோடு இசையினால் அவன் பாடுதலும் அதற்கு விரும்பிய பெருமானைப் பணிவார்களின் வினைகள் கெடும். கு-ரை: வலிந்த தோள் - வலிமையுடைய தோள் என்க. நெருங்க - அழிய. நீள்வரை - நீண்டகயிலாயமலை. புரிந்து - இடைவிடாது விரும்பி. கைந்நரம்பு - கையின்கண் உளதாகிய நரம்பு. பரிந்தனை - பரிவு செய்தவனை; இரங்கியவனை. பாறும் - அழியும். |
|