|
பாடல் எண் :1455 | அரவு கையின ராதி புராணனார் மரவு சேர்கட வூரின் மயானத்தார் பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வர் பிரமன் மாற்கும் பெருமா னடிகளே. |
| 8 | பொ-ரை: கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள், அரவம் உடைய கையினர்; ஆதியிற்றோன்றிய பழமையானவர்; தம்மைப் பரவும் அடியார்களது இடர்களைத் தீர்ப்பவர்; அவர்களைப் பணியும் கொள்பவர்; பிரமன், மாலுக்கும் பெரிய இயல்புடையவராவர். கு-ரை: அரவு கையினார் - பாம்பைக் கங்கணமாக அணிந்த திருக்கைகளை உடையவர். ஆதிபுராணனார் - எல்லாவற்றிற்கும் முதல்வராயும், பழமையானவராயும் உள்ளவர். மரவு - மராமரம். பெருமான் - தலைவன். |
|