பாடல் எண் :1629
என்பு பூண்டெரு தேறி யிளம்பிறை
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி தேரினும் நாரையூர்
அன்ப னுக்கது வம்ம வழகிதே.

8
பொ-ரை: எலும்புகளைப் பூண்டு, எருதின்மேல் ஏறி, இளம் பிறையினை மின்னலை முறுக்கினாலொத்த ஒளிச்சடையின் மேல் விளங்கச் சூடி, நல்ல பகலிலும் பலிதேர்வராயினும், திருநாரையூரில் உள்ள அன்பு வடிவாய சிவபெருமானுக்கு அது மிக்க வியப்பும் அழகும் உடையதே.
கு-ரை: மின்புரிந்த-மின்னலைப்போல் முறுக்கி விளங்கிய. நன்பகல்- நல்ல பகற்போது. பலிதேரினும்-உணவு இரந்தாலும். அன்பன்-அன்பே வடிவமாயவன்.