பாடல் எண் :1689
செருத்த னால்தன தேர்செல வுய்த்திடும்
கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல்
பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல்
பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே.

10
பொ-ரை: பொழில்கள் நிறைந்த புத்தூர்த் தலத்திறைவர், பொருதற்குத் தன்னுடைய தேர் செல்லுமாறு செலுத்துகின்ற கருத்தொடு கூடியவனாகிய இராவணன் திருக்கயிலையை எடுக்கலுற்ற போது, அவன் உடலும் பருத்த தோள்களும் சிதைந்து கெடும் படியாகத் தம் திருப்பாதத்து ஒரு திருவிரலைப் பொருத்தியவர் ஆவர்.
கு-ரை: செருதன்னால் - போரால். தன - தன்னுடையவான. உய்த்திடும் - செலுத்தும். கருத்தனாய் - எண்ணமுடையவனாய்.