பாடல் எண் :1702
குளிர்பு னற்குரங் காடுது றையனைத்
தளிர்நி றத்தையல் பங்கனைத் தண்மதி
ஒளிய னைந்நினைந் தேனுக்கென் னுள்ளமும்
தெளிவி னைத்தெளி யத்தெளிந் திட்டதே.

3
பொ-ரை: குளிர்கின்ற நீர் சூழ்ந்த குரங்காடுதுறையில் இருப்பவனும், மாந்தளிரைப் போன்ற நிறம் உடைய மேனியினளாகிய உமாதேவியைப் பங்கிற்கொண்டவனும் தண்ணியமதி ஒளியனும் ஆகிய பெருமானை நினைந்த அடியேனுக்கு என் உள்ளமும் தெளிவுறும்படித் தெளிவினைத் தெளிந்தது.
கு-ரை: தளிர்நிறத் தையல் -தளிர்போன்ற நிறத்தையுடைய பார்வதி. உள்ளம் -மனம். தெளிவினை - தெளியவேண்டிய பொருளாயுள்ள இறைவனை. தெளிய - விளங்க, தெளிந்திட்டது- உணர்ந்து தெளிந்து கொண்டது.