பாடல் எண் :1717
முன்னை நான்செய்த பாவ முதலறப்
பின்னை நான்பெரி தும்மருள் பெற்றது
அன்ன மார்வயற் கோழம்பத் துள்ளமர்
பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே.

7
பொ-ரை: அன்னம் பொருந்திய வயலை உடைய கோழம்பத்துள் அமர்ந்திருக்கின்ற பின்னிய நீண்டசடையானைப் பிதற்றியே, முன்பு நான் செய்த பாவம் முதல் அறும்படிப் பின்பு நான் பெரிதும் அருள்பெற்றது.
கு-ரை: முன்னை நான் செய்த பாவ முதல் - முற்பிறவியில் நான் செய்த பாவமாகிய முதல். அற - நீங்க. பின்னை - பின்னர்(இப்பிறவியில்). பெரிதும் - மிகுதியும். ஆர் - பொருந்திய. பின்னல் - முறுக்கிய. வார் - நீண்ட. பிதற்றியே - இறைவன் திருநாமத்தைப் பல காலும் சொல்லியேயாகும்.
முற்பிறப்பில் செய்த பாவங்காரணமாக நான் சமணசமயம் சார்ந்ததும், பின்னர் அதனின் நீங்கிப் பெருமான் திருவருள் பெற்றதும் எல்லாம், அவன் திருப்பெயரைப் பலகாலும் ஓதிய காரணத்தால் ஆயின என்றார்.