|
பாடல் எண் :1720 | சமர சூரபன் மாவைத் தடிந்தவேற் குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள் அமர லோகம தாளுடை யார்களே. |
| 10 | பொ-ரை: போரெதிர்ந்துவந்த சூரபன்மனைக் கொன்ற வேற்படையை உடைய முருகவேளுக்குத் தந்தையும், நல்ல கோழம்பம் மேவிய தேவர்தலைவனும் ஆகிய பெருமானுக்கு அன்புடைய தொண்டர்கள், அமரலோகத்தை ஆளும் உரிமையுடையவராவர். கு-ரை: சமரசூரபன்மா - போரிலே வல்ல சூரபன்மா என்ற அசுரன். தடிந்த - கொன்ற. வேல்குமரன் - வேலாயுதத்தை உடைய முருகன். தாதை - தந்தையாகிய சிவபெருமான். அமரர்கோ - தேவர்கள் தலைவனாகிய பெருமான். அன்புடைத் தொண்டர்கள் அமரலோகம் ஆளுதலை உடையவர்களாவர். |
|