பாடல் எண் :1758
பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்
பூம்ப ணைப்பொலி கின்ற புராணனும்
தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல்
நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே.

9
பொ-ரை: நாம் பணிந்து அடிபோற்றும் நள்ளாற்று இறைவன், பாம்பாகிய அணையத்தக்க பள்ளியினைக் கொண்ட திருமாலும், பூவாகிய பணைத்த பள்ளியிற் பொலிகின்ற புராணனாகிய நான்முகனும், தாம் பணிந்து அளக்க இயலாத ஒப்பற்ற தனித்தழலாக உள்ளவன்.
கு-ரை: அணை - படுக்கை. பள்ளிகொண்ட - உறங்குதலைக் கொண்ட. பரமன் - மேலான திருமால். பூம்பணை - வயல்களில் தோன்றிய தாமரை. பொலிகின்ற - விளங்குகின்ற. புராணன் - தொல்லோனாகிய பிரமன். தாம் - இருவர் தாமும். பணிந்து- வணங்கி. அளப்பொண்ணா - அளக்க ஒண்ணாத. தனித்தழல் - தழலாய் நின்றவன்.