|
பாடல் எண் :1770 | கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால் மண்டி யேச்சுணும் மாதரைச் சேராதே சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக் கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே. |
| 1 | பொ-ரை: காளை போன்ற ஆடவரிடத்துப் பொருந்திக் கண்டவாறு பேசும் பேச்சாகிய ஏச்சுண்ணும் பெண்களைச் சேராது, சண்டீச்சுரர்க்கு அருள் செய்த கொண்டீச்சுரத்து இறைவன் திருவடியைக் கூறுவீராக. கு-ரை: கண்ட பேச்சினில் - பயனற்ற பேச்சுக்களில் ஈடுபட்டு. காளையர் தங்கள் பால் - இளைஞர்களிடத்து. மண்டி - நெருங்கி. ஏச்சுணும் - பின் அவரால் ஏசும்மொழிகளைப் பெறும். கழல் கூறும் - திருவடிகளின் பெருமைகளைக் கூறுங்கள். மாதராரிடத்து அல்லற்படுகிறவர்கள் இறைவன் திருவடிகளைப் பற்றினால் இன்புறுவர். |
|