|
பாடல் எண் :1788 | வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள் வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான் சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப் பந்து வாக்கி உய்யக்கொளுங் காண்மினே. |
| 9 | பொ-ரை: மயக்கந் தீர்தற்குரிய மனிதர்களே! அடியேன் கூறுவதை வந்து கேட்பீராக; வெந்த திருநீற்றை அணிந்தவனாகிய விசயமங்கைப் பெருமான் தன்னைச் சிந்தையால் நினைவார்களைச் சிக்கெனத் தன் உறவுடையவராக்கி உய்யக் கொள்வான்; காண்பீராக. கு-ரை: கேண்மின் - கேளுங்கள். மயல் தீர் - அறியாமை நீங்கிய. சிக்கென - உறுதியாக. பந்து - உறவினன். |
|