பாடல் எண் :1832
தாயத் தார்தமர் நல்நிதி யென்னுமிம்
மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல்
காயத் தேயுளன் கானூர் முளையினை
வாயத் தால்வணங் கீர்வினை மாயவே.

3
பொ-ரை: பங்காளியர், தம் சுற்றத்தார், நல்ல செல்வம் என்னும் இம்மாயத்திலே கிடந்து மயங்கவேண்டா; உம் உடலுள்ளேயே உள்ளவனாகிய கானூர் முளையாகிய பெருமானை உங்கள் வினைகள்கெட வாயாற் கூறிப் பரவி வணங்குவீராக.
கு-ரை: தாயத்தார் - முன்னோர் தேடிய பழம்பொருளின் பாகஸ்தர். தமர் - சுற்றத்தார். இம்மாயத்தே - இப்பொய்மையின்கண்ணே. கிடந்திட்டு - பொருந்தி வருந்திக்கொண்டு. மயங்கிடேல்- அறிவு மயங்காதே. காயத்தே - உன் உடலிடத்தே. உளன் - அருவமாய் எழுந்தருளியுள்ளான். வாயத்தால் - உண்மை அன்பால். மாய - அழிய.