|
பாடல் எண் :1839 | பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும் கூரி தாய அறிவுகை கூடிடும் சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி நாரி பாகன்றன் நாம நவிலவே. |
| 1 | பொ-ரை: சீர்மை உடையவர்கள் பயிலும் திருச்சேறையுட் செந்நெறியில் வீற்றிருக்கும் உமையொருபாகனுடைய நாமம் நவின்றால் புண்ணியம் பூரித்துவரும்; பொய்கெடும்; கூர்மை உடையதாகிய அறிவு கைகூடும். கு-ரை: பூரியா - நிறைந்து, பெருகி. புண்ணியம் பூரியா வரும். பொய் - புண்ணியத்துக்கு மறுதலையாகிய கீழ்மை. கூரிதாய அறிவு - கூர்மையான நுண்ணறிவு. கைகூடிடும் - உண்டாகும். சீரியார் - சிறந்தவர். பயில் - வாழ்கின்ற. நாரிபாகன் - பார்வதிதேவியைப் பாகமாக உடையவன். நாமம் - திருப்பெயர். நவில - சொல்ல. செந்நெறி - கோயில் திருப்பெயர். செம்மை நவிலவரும் எனக் கூட்டுக. |
|