பாடல் எண் :1848
பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.

10
பொ-ரை: பொருந்திய உயர்ந்த திருக்கயிலையைத் திருமலையைப் பிடித்து ஏந்தலுற்ற இராவணன் வருந்துமாறு ஊன்றி மலரடியினைச் சற்று வளைத்தவனும், திருந்திய சேறையிற் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதியும் ஆகிய இறைவனை உரைப்பார்க்குத் துன்பங்கள் இல்லை.
கு-ரை: பொருந்து - நிலத்தில் ஆழமாய்ப் பொருந்திய. நீண்மலை - புகழால் உயர்ந்த திருக்கயிலை மலையை. பிடித்து - பற்றி. ஏந்தினான் - தூக்கியவனாகிய இராவணன். வருந்த - உடல் வருந்த. வாங்கினான் - அவனுக்குக் கருணை செய்வதற்காக மீளவும் எடுத்தான். இடர் - துன்பம்.