பாடல் எண் :1851
முல்லை நன்முறு வல்லுமை பங்கனார்
தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார்
கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங்
கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே.

3
பொ-ரை: முல்லையையொத்த நல்ல சிரிப்புடைய உமை ஒரு பங்கில் உடையவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் உறையும் அருட்செல்வரும், முல்லை நிலத்து ஏற்றினை வாகனமாக உடைய வரும் ஆகிய கோடிகா இறைவரே என்று விரைந்து ஏத்துவார்க்குக் குற்றம் ஒன்றும் இல்லை.
கு-ரை: முல்லைநன் முறுவல் - முல்லை அரும்பு போன்று வெண்மையான நல்ல பற்களை உடைய. உமை - பார்வதி. தில்லையம்பலத்தில் - சிதம்பரத்தில். உறை - உறைகின்ற.
செல்வனார் - வீடு பேறாகிய செல்வத்தையுடையவர். கொல்லை - முல்லை நிலத்துக்குரிய. ஏற்றினர் - இடப ஊர்தியை உடையவர். ஒல்லை - விரைவாக. ஊனம் - குறை.