பாடல் எண் :1864
அரக்க னார்தலை பத்து மழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிருக்கு வேளூர்
விருப்பி னால்தொழு வார்வினை வீடுமே
.

10
பொ-ரை: இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும்.
கு-ரை: அரக்கனார் - இராவணன். ஆர், இழித்தற்பொருளில் வந்தது. அழிதர - அழிய. நெருக்கி - நெரித்து. மாமலர்ப்பாதம் - மலர்களிற் சிறந்த தாமரை மலர்போன்ற திருவடி. நிறுவிய - மீள அவன் உய்யும்படி நிறுத்திய. பொருப்பினார் - கயிலைமலையார். வீடும் - அழியும்.