|
பாடல் எண் :1901 | மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர் கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே. |
| 2 | பொ-ரை: செல்வத்தையே தேடி நீர் உமக்குள்ளே மகிழ்ந்து நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணமற்றவர்களே! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளியுள்ளான் திருவடி சேர்வீராக. கு-ரை: மாட்டை - செல்வத்தை. மகிழ்ந்து - மனம் செருக்கி. நும்முளே - உங்களுக்குள். நாட்டுப்பொய்யெலாம் - உலகில் நடக்கும் பல உண்மையில்லாத நிகழ்ச்சிகளையெல்லாம். நாணிலீர் - வெட்கமில்லாதவர்களே! கூட்டைவிட்டு - உடலை விட்டு. |
|