|
பாடல் எண் :1954 | மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே. |
| 1 | பொ-ரை: இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும், மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும், வீசுகின்ற தென்றலின் சாயலும், செறிந்த இளவேனிலின் மாட்சியும், ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும். கு-ரை: மாசில் - சுர இலக்கணங்களில் சிறிதும் வழுவாது இலக்கணம் முழுதும் நிரம்பச் சொல்லைமிழற்றும் இயல்புடைய. மாலைமதியம் - மாலைநேரத்தில் தோன்றும் முழுமதி. பௌர்ணிமை மதியைக் குறித்தது. வீசுதென்றல் - மெல்லிதாய் வீசுகின்றதென்றல்; வீங்கு - பெருகிய. இளவேனில் - சித்திரை, வைகாசி மாதங்கள். மூசுவண்டு - (மாலைநேரத்தே மலரும் நீர்ப்பூக்களிடத்தே மொய்க்கின்ற) வண்டுகள். அறை - ஒலிக்கின்ற. பொய்கை -அகழ்வாரின்றித் தானே தோன்றிய நீர்நிலை. ஈசன் எந்தை, இருபெயரொட்டு. தலைவனாகிய என் தந்தை. இணையடி - இரண்டு திருவடிகள். திருவடிநீழல் ஐம்புலன்களுக்கும் விருந்துதரும் இயற்கையின்பத்தை ஒத்தது என்றார்; வீணை, செவி, மதியம், கண்கள், தென்றல், மூக்கு. வண்டு அறை பொய்கை, வாய், வேனில் மெய். இவ்வாறு முறையே ஐந்து புலன்களுக்கும் இன்பந்தருவனவாய இயற்கைச் சூழலை ஒத்து நீற்றறையில் திருவடிநீழலை எண்ணிய அப்பர்சுவாமிகளுக்குத் தண்மையைத் தந்தது ஆதலின் திருவடிநீழல் அளிக்கும் இன்பத்தோடு ஒப்பிட்டார். |
|