பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்கு ஆவணத்து உடையான், அடியார்களை;- தீ வணத் திருநீறு மெய்பூசி, ஓர் கோவணத்து உடையான், குடமூக்கிலே.
பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர், தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ!- ழுவேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க!ழு என்று கூத்து ஆடி(ய்) உறையும் குடமூக்கிலே.
நங்கையாள் உமையாள் உறை நாதனார்- அம் கையாளொடு அறுபதம் தாழ்சடைக் கங்கையாள் அவள், கன்னி எனப்படும் கொங்கையாள், உறையும் குடமூக்கிலே.
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல், ஏதானும்(ம்) இனிது ஆகும்; இயமுனை- சேதா ஏறு உடையான் அமர்ந்த(வ்) இடம்- கோதாவிரி உறையும் குடமூக்கிலே.
நக்க(அ)அரையனை, நாள்தொறும் நன் நெஞ்சே! வக்கரை உறைவானை, வணங்கு, நீ!- அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன், கொக்கரை உடையான், குடமூக்கிலே.
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்! பிறவி நீங்கப் பிதற்றுமின், பித்தராய்-! மறவனாய்ப் பார்த்தன்மேல் கணை தொட்ட எம் குறவனார் உறையும் குடமூக்கிலே.
தொண்டர் ஆகித் தொழுது பணிமினோ, பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்!- விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரைக் கொண்டவன்(ன்) உறையும் குடமூக்கிலே.
காமியம் செய்து காலம் கழியாதே, ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ!- சாமியோடு, சர(ச்) சுவதி அவள், கோமியும்(ம்), உறையும் குடமூக்கிலே.
சிரமம் செய்து, சிவனுக்குப் பத்தராய்ப் பரமனைப் பல நாளும் பயிற்றுமின்!- பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் குரவனார் உறையும் குடமூக்கிலே.
அன்றுதான் அரக்கன் கயிலாயத்தைச் சென்று தான் எடுக்க(வ்), உமை அஞ்சலும் நன்று தான் நக்கு, நல்விரல் ஊன்றி, பின் கொன்று, கீதம் கேட்டான், குடமூக்கிலே.