கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலத்தான், புல்லியார் புரம்மூன்றும் எரிசெய்தவன், நெல்லியான், நிலை ஆன நெய்த்தானனைச் சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே.
இரவனை, இடு வெண்தலை ஏந்தியை, பரவனை, படையார் மதில் மூன்றையும் நிரவனை, நிலைஆன நெய்த்தானனை, குரவனை, தொழுவார் கொடிவாணரே.
ஆன் இடைஐந்தும் ஆடுவர்; ஆர் இருள் கான் இடை நடம் ஆடுவர்; காண்மினோ! தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை வான் இடைத் தொழுவார் வலிவாணரே.
விண்டவர் புரம்மூன்றும் வெண் நீறு எழக் கண்டவன், கடிது ஆகிய நஞ்சினை உண்டவன்(ன்), ஒளி ஆன நெய்த்தானனைத் தொண்டராய்த் தொழுவார் சுடர்வாணரே.
முன்கை நோவக் கடைந்தவர் நிற்கவே சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான், நங்கையோடு நவின்ற நெய்த்தானனைத் தம் கையால்-தொழுவார் தலைவாணரே.
சுட்ட நீறு மெய் பூசி, சுடலையுள் நட்டம் ஆடுவர், நள் இருள் பேயொடே; சிட்டர், வானவர், தேரும் நெய்த்தானனை இட்டம் ஆய்த் தொழுவார் இன்பவாணரே.
கொள்ளித் தீ-எரி வீசிக் கொடியது ஓர் கள்ளிக் காட்டு இடை ஆடுவர்; காண்மினோ! தெள்ளித் தேறித் தெளிந்து நெய்த்தானனை உள்ளத்தால்-தொழுவார் உம்பர்வாணரே.
உச்சிமேல் விளங்கும்(ம்) இளவெண்பிறை பற்றி ஆடு அரவோடும் சடைப் பெய்தான், நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனைச் சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே.
மாலொடும், மறை ஓதிய நான்முகன், காலொடும் முடி காண்பு அரிது ஆயினான்; சேலொடும் செருச் செய்யும் நெய்த்தானனை மாலொடும் தொழுவார் வினை வாடுமே.
வலிந்த தோள் வலி வாள் அரக்கன்தனை நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார் புரிந்து கைந்நரம்போடு இசை பாடலும் பரிந்தனை, பணிவார் வினை பாறுமே.