அருவனாய், அத்திஈர் உரி போர்த்து உமை உருவனாய், ஒற்றியூர் பதி ஆகிலும், பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான், திருவினால்-திரு வேண்டும், இத் தேவர்க்கே.
வையம் வந்து வணங்கி வலம் கொளும் ஐயனை அறியார், சிலர் ஆதர்கள்; பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனன்பால் பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே.
வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை திண்ணம் ஆகத் திருச்சடைச் சேர்த்தியே பண்ணும் ஆகவே பாடும், பழனத்தான்; எண்ணும், நீர் அவன் ஆயிரம் நாமமே!
மூர்க்கப் பாம்பு பிடித்தது மூச்சிட, வாக்கு அப் பாம்பினைக் கண்ட துணிமதி பாக்க, பாம்பினைப் பற்றும் பழனத்தான், தார்க் கொள் மாலை சடைக் கரந்திட்டதே.
நீலம் உண்ட மிடற்றினன்; நேர்ந்தது ஓர் கோலம் உண்ட குணத்தான்; நிறைந்தது ஓர்- பாலும் உண்டு, பழனன்பால்; என்னிடை மாலும் உண்டு, இறை என் தன் மனத்துளே.
மந்தம் ஆக வளர்பிறை சூடி ஓர் சந்தம் ஆகத் திருச்சடை சாத்துவான், பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான், எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே.
மார்க்கம் ஒன்று அறியார், மதி இ(ல்)லிகள்; பூக் கரத்தின் புரிகிலர், மூடர்கள்;- பார்க்க நின்று பரவும் பழனத்தான் தாள்கண் நின்று தலை வணங்கார்களே.
ஏறினார் இமையோர்கள் பணி கண்டு தேறுவார் அலர், தீவினையாளர்கள்; பாறினார் பணி வேண்டும் பழனத்தான் கூறினான், உமையாளொடும் கூடவே.
சுற்றுவார்; தொழுவார்; சுடர்வண்ணன், மேல்- தெற்றினார் திரியும் புரம்மூன்று எய்தான், பற்றினார் வினை தீர்க்கும் பழனனை, எற்றினான் மறக்கேன், எம்பிரானையே?
பொங்கு மாகடல் சூழ் இலங்கைக்கு இறை அங்கம் ஆன இறுத்து அருள் செய்தவன், பங்கன், என்றும் பழனன், உமையொடும் தங்கன், தாள் அடியேன் உடை உச்சியே.