கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை உள்ளம் உள்கி உரைக்கும், திருப்பெயர் வள்ளல் மா மயிலாடுதுறை உறை வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே.
சித்தம் தேறும்; செறிவளை சிக்கெனும்; பச்சை தீரும், என் பைங்கொடி-பால்மதி வைத்த மா மயிலாடுதுறை அரன் கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே.
அண்டர் வாழ்வும், அமரர் இருக்கையும், கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம் வண்டு சேர் மயிலாடுதுறை அரன் தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.
வெஞ்சினக் கடுங் காலன் விரைகிலான்; அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம்- மஞ்சன், மா மயிலாடுதுறை உறை அஞ்சலாள் உமைபங்கன், அருளிலே.
குறைவு இலோம், கொடு மானுட வாழ்க்கையால்- கறை நிலாவிய கண்டன், எண் தோளினன், மறைவலான், மயிலாடுதுறை உறை இறைவன், நீள் கழல் ஏத்தி இருக்கிலே.
நிலைமை சொல்லு, நெஞ்சே! தவம் என் செய்தாய்? கலைகள் ஆய வல்லான், கயிலாயநல் மலையன், மா மயிலாடுதுறையன், நம் தலையின்மேலும் மனத்துளும் தங்கவே.
நீற்றினான், நிமிர்புன்சடையான், விடை- ஏற்றினான், நமை ஆள் உடையான், புலன் மாற்றினான், மயிலாடுதுறை என்று போற்றுவார்க்கும் உண்டோ, புவி வாழ்க்கையே.?
கோலும், புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும், தோலும், பூண்டு துயரம் உற்று என் பயன்? நீல மா மயில் ஆடு துறையனே! நூலும் வேண்டுமோ, நுண் உணர்ந்தோர்கட்கே?
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி மணம் கொளச் சடை வைத்த மறையவன், வணங்கும் மா மயிலாடுதுறை அரன், அணங்கு ஓர்பால் கொண்ட கோலம் அழகிதே!
நீள் நிலா அரவச் சடை நேசனைப் பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம்; வாள்நிலா மயிலாடுதுறைதனைக் காணில், ஆர்க்கும் கடுந் துயர் இல்லையே.
பருத்த தோளும் முடியும் பொடிபட இருத்தினான், அவன் இன் இசை கேட்டலும் வரத்தினான், மயிலாடுதுறை தொழும் கரத்தினார் வினைக்கட்டு அறும்; காண்மினே!