கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால், இல்லத்தார் செய்யல் ஆவது என்? ஏழைகாள்! நல்லத்தான், நமை ஆள் உடையான், கழல் சொல்லத்தான் வல்லிரேல்,- துயர் தீருமே.
பொக்கம் பேசிப் பொழுது கழியாதே, துக்கம் தீர் வகை சொல்லுவன்; கேண்மினோ; தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன், நக்கன், சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே.
பிணிகொள் வார்குழல் பேதையர் காதலால் பணிகள் மேவிப் பயன் இல்லை; பாவிகாள்! அணுக வேண்டில், அரன்நெறி ஆவது; நணுகும், நாதன் நகர் திரு நல்லமே.!
தமக்கு நல்லது; தம் உயிர் போயினால், இமைக்கும் போதும் இராது, இக் குரம்பைதான்; உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி- நமக்கு நல்லது-நல்லம் அடைவதே.
உரை தளர்ந்து உடலார் நடுங்காமுனம், நரைவிடை உடையான் இடம் நல்லமே பரவுமின்! பணிமின்! பணிவாரொடே விரவுமின்! விரவாரை விடுமினே!
அல்லல் ஆக ஐம் பூதங்கள் ஆட்டினும், வல்ல ஆறு ழுசிவாய நமழு என்று, நல்லம் மேவிய நாதன் அடி தொழ, வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.
மாதராரொடு, மக்களும், சுற்றமும், பேதம் ஆகிப் பிரிவதன் முன்னமே, நாதன் மேவிய நல்லம் நகர் தொழப் போதுமின்! எழுமின்! புகல் ஆகுமே.
வெம்மை ஆன வினைகடல் நீங்கி, நீர், செம்மை ஆய சிவகதி சேரல் ஆம்; சும்மை ஆர் மலர் தூவித் தொழுமினோ, நம்மை ஆள் உடையான் இடம் நல்லமே!
காலம் ஆன கழிவதன் முன்னமே, ஏலும் ஆறு வணங்கி, நின்று, ஏத்துமின் மாலும், மா மலரானொடு, மாமறை- நாலும் வல்லவர், கோன் இடம் நல்லமே!
மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி ஒல்லையில்(ல்) ஒழித்தான் உறையும் பதி, நல்ல நல்லம் எனும் பெயர், நாவினால் சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே.