நீல மா மணிகண்டத்தர்; நீள் சடைக் கோல மா மதி கங்கையும் கூட்டினார்; சூலம் மான் மழு ஏந்தி, சுடர் முடிப் பால் நெய் ஆடுவர்-பாலைத்துறையரே.
கவள மா களிற்றின்(ன்)உரி போர்த்தவர்; தவள-வெண்நகை மங்கை ஓர் பங்கினர்; திவள வானவர் போற்றித் திசைதொழும் பவளமேனியர்- பாலைத்துறையரே.
மின்னின் நுண் இடைக் கன்னியர் மிக்கு, எங்கும் பொன்னிநீர் மூழ்கிப் போற்றி அடி தொழ, மன்னி நால்மறையோடு பல்கீதமும் பன்னினார் அவர்-பாலைத்துறையரே.
நீடு காடு இடம் ஆய், நின்ற பேய்க்கணம் கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே, ஆடினார் அழகு ஆகிய நால்மறை பாடினார் அவர்-பாலைத்துறையரே.
ழுசித்தர், கன்னியர், தேவர்கள், தானவர், பித்தர், நால்மறை வேதியர், பேணிய அத்தனே! நமை ஆள் உடையாய்!ழு எனும் பத்தர்கட்கு அன்பர்-பாலைத்துறையரே.
விண்ணினார் பணிந்து ஏத்த, வியப்பு உறும் மண்ணினார் மறவாது, ழுசிவாயழு என்று எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் பண்ணினார் அவர்-பாலைத்துறையரே.
குரவனார்; கொடுகொட்டியும், கொக்கரை விரவினார், பண் கெழுமிய வீணையும்;- மருவு நாள்மலர் மல்லிகை, செண்பகம், பரவு நீர்ப் பொன்னிப் பாலைத்துறையரே.
தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து அடரும்போது, அரனாய் அருள்செய்பவர்; கடலின் நஞ்சு அணி கண்டர்-கடிபுனல் படரும் செஞ்சடைப் பாலைத்துறையரே.
மேகம் தோய் பிறை சூடுவர்; மேகலை நாகம் தோய்ந்த அரையினர்; நல் இயல் போகம் தோய்ந்த புணர்முலை மங்கை ஓர்- பாகம் தோய்ந்தவர்-பாலைத்துறையரே.
வெங் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர்; அம் கணார்; அடியார்க்கு அருள் நல்குவர்; செங்கண் மால் அயன் தேடற்கு அரியவர்; பைங்கண் ஏற்றினர்-பாலைத்துறையரே.
உரத்தினால் அரக்கன்(ன்) உயர்மாமலை நெருக்கினானை நெரித்து, அவன் பாடலும் இரக்கமா அருள்செய்த பாலைத்துறை கரத்தினால்-தொழுவார் வினை ஓயுமே.