நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்; வல்லர், வல்வினை தீர்க்கும் மருந்துகள்; பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரி செல்வர் போல்-திரு நாகேச்சுரவரே.
நாவல் அம்பெருந்தீவினில் வாழ்பவர் மேவி வந்து வணங்கி, வினையொடு பாவம் ஆயின பற்று அறுவித்திடும் தேவர்போல்-திரு நாகேச்சுரவரே.
ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர்; ஆதியார், அயனோடு அமரர்க்கு எலாம்; மாது ஓர் கூறர்; மழு வலன் ஏந்திய நாதர்போல்-திரு நாகேச்சுரவரே.
சந்திர(ன்)னொடு சூரியர்தாம் உடன் வந்து சீர் வழிபாடுகள் செய்தபின், ஐந்தலை அரவின் பணி கொண்டு, அருள் மைந்தர்போல்-மணி நாகேச்சுரவரே.
பண்டு ஓர் நாள் இகழ் வான் பழித் தக்கனார் கொண்ட வேள்விக் குமண்டை அது கெட, தண்டமா, விதாதாவின் தலை கொண்ட செண்டர்போல்-திரு நாகேச்சுரவரே.
வம்பு பூங் குழல் மாது மறுக ஓர் கம்ப யானை உரித்த கரத்தினர்; செம்பொன் ஆர் இதழி(ம்) மலர்ச் செஞ்சடை நம்பர்போல்-திரு நாகேச்சுரவரே.
மானை ஏந்திய கையினர்; மை அறு ஞானச் சோதியர்; ஆதியர்; நாமம்தான் ஆன அஞ்சு எழுத்து ஓத, வந்து அண்ணிக்கும் தேனர்போல்-திரு நாகேச்சுரவரே.
கழல் கொள் காலினர்; காலனைக் காய்ந்தவர்; தழல் கொள் மேனியர்; சாந்த வெண் நீறு அணி அழகர்; ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய குழகர்போல்-குளிர் நாகேச்சுரவரே.
வட்ட மா மதில் மூன்று உடன் வல் அரண் சுட்ட செய்கையர் ஆகிலும், சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்து, குளிர்விக்கும் சிட்டர்போல்-திரு நாகேச்சுரவரே.
தூர்த்தன் தோள்முடிதாளும் தொலையவே சேர்த்தினார், திருப்பாதத்து ஒருவிரல்; ஆர்த்து வந்து, உலகத்தவர் ஆடிடும் தீர்த்தர்போல்-திரு நாகேச்சுரவரே.