வீறு தான் உடை வெற்பன் மடந்தை ஓர்- கூறன் ஆகிலும், கூன்பிறை சூடிலும், நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு ஆறு சூடலும், அம்ம அழகிதே!
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும், வெள்ளி கொண்ட வெண்பூதி மெய் ஆடலும்,- நள்ளி தெண்திரை நாரையூரான் நஞ்சை அள்ளி உண்டலும், அம்ம அழகிதே!
வேடு தங்கிய வேடமும், வெண்தலை- ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்,- நாது தங்கிய நாரையூரான் நடம்- ஆடு பைங்கழல், அம்ம அழகிதே!
கொக்கின் தூவலும், கூவிளம் கண்ணியும், மிக்க வெண் தலை மாலை, விரிசடை நக்கன் ஆகிலும், நாரையூர் நம்பனுக்கு அக்கின் ஆரமும், அம்ம அழகிதே!
வடி கொள் வெண்மழு மான் அமர் கைகளும், பொடி கொள் செம்பவளம் புரை மேனியும், நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் அடிகள் தம் வடிவு, அம்ம அழகிதே!
சூலம் மல்கிய கையும், சுடரொடு, பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்,- ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு- ஆல நீழலும், அம்ம அழகிதே!
பண்ணின் நால்மறை பாடலொடு ஆடலும், எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும், நண்ணினார் துயர் தீர்த்தலும், - நாரையூர் அண்ணலார் செய்கை - அம்ம அழகிதே!
என்பு பூண்டு, எருது ஏறி, இளம்பிறை மின் புரிந்த சடைமேல் விளங்கவே, நன் பகல் பலி தேரினும், நாரையூர் அன்பனுக்கு அது அம்ம அழகிதே!
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே, இரவில் நின்று எரி ஆடலும்,-நீடுவான் நரலும் வாரி நன்நாரையூர் நம்பனுக்கு- அரவும் பூணுதல், அம்ம அழகிதே!
கடுக்கை அம் சடையன் கயிலை(ம்) மலை எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்-அஞ்சும் நடுக்கம் வந்து இற, நாரையூரான் விரல் அடுத்த தன்மையும், அம்ம அழகிதே!