படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்- உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம், புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம் அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.
பறப்பையும் பசுவும் படுத்துப் பல- திறத்தவும்(ம்) உடையோர் திகழும் பதி, கறைப் பிறைச் சடைக் கண்ணுதல் சேர்தரு சிறப்பு உடை, திரு வாஞ்சியம் சேர்மினே!
புற்றில் ஆடு அரவோடு புனல் மதி தெற்று செஞ்சடைத் தேவர்பிரான் பதி, சுற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம் பற்றிப் பாடுவார்க்குப் பாவம் இல்லையே.
அங்கம் ஆறும் அருமறை நான்கு உடன் தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர், செங்கண் மால இடம் ஆர், திரு வாஞ்சியம் தங்குவார் நம் அமரர்க்கு அமரரே.
நீறு பூசி நிமிர்சடைமேல் பிறை ஆறு சூடும் அடிகள் உறை பதி, மாறுதான் ஒருங்கும் வயல், வாஞ்சியம் தேறி வாழ்பவர்க்குச் செல்வம் ஆகுமே.
அற்றுப் பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு உற்ற நல்-துணை ஆவான் உறை பதி, தெற்று மாடங்கள் சூழ், திரு வாஞ்சியம் கற்றுச் சேர்பவர்க்குக் கருத்து ஆவதே.
அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள் திருத்தும் சேவடியான் திகழும் நகர் ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம் அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.