தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் கொங்கு அலர்க் குழல் கொம்பு அனையாளொடு மங்கலக்குடி மேய மணாளனே.
காவிரி(ய்)யின் வடகரைக் காண்தகு மா விரி(ய்)யும் பொழில் மங்கலக்குடித் தே அரி(ய்)யும் பிரமனும் தேட ஒணாத் தூ எரிச்சுடர்ச் சோதியுள் சோதியே!
மங்கலக்குடி ஈசனை மாகாளி, வெங்கதிர்ச் செல்வன், விண்ணொடு மண் உளோர், சங்கு சக்கரதாரி, சதுமுகன், அங்கு அகத்தியனும்(ம்), அர்ச்சித்தார் அன்றே.
மஞ்சன், வார்கடல் சூழ் மங்கலக்குடி, நஞ்சம் ஆர் அமுது ஆக நயந்து கொண்டு, அஞ்சும் ஆடல் அமர்ந்து, அடியேன் உடை நெஞ்சம் ஆலயமாக் கொண்டு நின்றதே!
செல்வம் மல்கு திரு மங்கலக்குடி- செல்வம் மல்கு சிவநியமத்தராய், செல்வம் மல்கு செழு மறையோர் தொழ, செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே.
மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய பின்னுவார் சடைப் பிஞ்ஞகன் தன் பெயர் உன்னுவாரும் உரைக்க வல்லார்களும் துன்னுவார், நன்நெறி தொடர்வு எய்தவே.
மாதரார் மருவும் மங்கலக்குடி ஆதி நாயகன், அண்டர்கள் நாயகன், வேதநாயகன், வேதியர் நாயகனபூதநாயகன், புண்ணியமூர்த்தியே.
வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி, விண்ட தாதையைத் தாள் அற வீசிய சண்ட நாயகனுக்கு அருள்செய்தவன் துண்ட மாமதி சூடிய சோதியே.
கூசுவார் அலர், குண்டர், குணம் இலர், நேசம் ஏதும் இலாதவர், நீசர்கள், மாசர்பால்- மங்கலக்குடி மேவிய ஈசன் வேறுபடுக்க-உய்ந்தேன் அன்றே!
மங்கலக்குடியான் கயிலை(ம்) மலை அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்கோன், தன் கரத்தொடு தாள்தலைதோள் தகர்ந்து, அங்கு அலைத்து, அழுது, உய்ந்தனன் தான் அன்றே!