6.5 திருஅதிகைவீரட்டானம்
போற்றித் திருத்தாண்டகம்
44எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி! எரிசுடர்
            ஆய் நின்ற இறைவா, போற்றி!
கொல் ஆர் மழுவாள்படையாய், போற்றி! கொல்லும்
            கூற்று ஒன்றை உதைத்தாய், போற்றி!
கல்லாதார் காட்சிக்கு அரியாய், போற்றி! கற்றார்
            இடும்பை களைவாய், போற்றி!
வில்லால் வியன் அரணம் எய்தாய், போற்றி!-
            வீரட்டம் காதல் விமலா, போற்றி!.
உரை
   
45பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா, போற்றி! பல்
                  ஊழி ஆய படைத்தாய், போற்றி!
ஓட்டு அகத்தே ஊணா உகந்தாய், போற்றி!
          உள்குவார் உள்ளத்து உறைவாய், போற்றி!
காட்டு அகத்தே ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
             கார்மேகம் அன்ன மிடற்றாய், போற்றி!
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய், போற்றி!-அலை
            கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
உரை
   
46முல்லை அம் கண்ணி முடியாய், போற்றி! முழுநீறு
                          பூசிய மூர்த்தி, போற்றி!
எல்லை நிறைந்த குணத்தாய், போற்றி! ஏழ் நரம்பின்
                      ஓசை படைத்தாய், போற்றி!
சில்லை சிரைத்தலையில் ஊணா, போற்றி! சென்று
       அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய், போற்றி!
தில்லைச் சிற்றம்பலம் மேயாய், போற்றி!-திரு
             வீரட்டானத்து எம் செல்வா, போற்றி!.
உரை
   
47சாம்பர் அகலத்து அணிந்தாய், போற்றி! தவநெறிகள்
                        சாதித்து நின்றாய், போற்றி!
கூம்பித் தொழுவார் தம் குற்றேவ(ல்)லைக்
            குறிக்கொண்டு இருக்கும் குழகா, போற்றி!
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து
                    உடன் வைத்த பண்பா, போற்றி!
ஆம்பல்மலர் கொண்டு அணிந்தாய், போற்றி!-அலை
             கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
உரை
   
48நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி! நிழல் திகழும்
              வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
         கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
    அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!-இருங் கெடில
                   வீரட்டத்து எந்தாய், போற்றி!.
உரை
   
49பாடுவார் பாடல் உகப்பாய், போற்றி! பழையாற்றுப்
                        பட்டீச்சுரத்தாய், போற்றி!
வீடுவார் வீடு அருள வல்லாய், போற்றி! வேழத்து
               உரி வெருவப் போர்த்தாய், போற்றி!
நாடுவார் நாடற்கு அரியாய், போற்றி! நாகம் அரைக்கு
                        அசைத்த நம்பா, போற்றி!
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய், போற்றி!-அலை
            கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
உரை
   
50மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய், போற்றி!
       மால்கடலும் மால்விசும்பும் ஆனாய், போற்றி!
விண் துளங்க மும்மதிலும் எய்தாய், போற்றி!
            வேழத்து உரி மூடும் விகிர்தா, போற்றி!
பண் துளங்கப் பாடல் பயின்றாய், போற்றி! பார்
                   முழுதும் ஆய பரமா, போற்றி!
கண் துளங்கக் காமனை முன் காய்ந்தாய், போற்றி!-
          கார்க் கெடிலம் கொண்ட கபாலீ, போற்றி!.
உரை
   
51வெஞ்சின வெள் ஊர்தி உடையாய், போற்றி!
     விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய், போற்றி!
துஞ்சாப் பலிதேரும் தோன்றால், போற்றி!
         தொழுதகை துன்பம் துடைப்பாய், போற்றி!
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா, போற்றி!
   நால்மறையோடு ஆறு அங்கம் ஆனாய், போற்றி!
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய், போற்றி!-அலை
           கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
உரை
   
52சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி! சீபர்ப்பதம்
                      சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
           புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி! தத்துவனே,
                  போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!-அலை
          கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.
உரை
   
53முக்கணா, போற்றி! முதல்வா, போற்றி!
         முருகவேள்தன்னைப் பயந்தாய், போற்றி!
தக்கணா, போற்றி! தருமா, போற்றி! தத்துவனே,
                 போற்றி! என் தாதாய் போற்றி!
தொக்கு “அணா” என்று இருவர் தோள் கைகூப்ப,
      துளங்காது எரிசுடர் ஆய் நின்றாய், போற்றி!
எக்கண்ணும் கண் இலேன்; எந்தாய், போற்றி!-எறி
               செடில வீரட்டத்து ஈசா, போற்றி!.
உரை