6.15 திருக்கருகாவூர்
திருத்தாண்டகம்
148குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்;
     கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்;
பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்;
       பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்;
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்;
           உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்;
கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்
                   ஆம்-கருகாவூர் எந்தைதானே.
உரை
   
149வித்து ஆம்; முளை ஆகும்; வேரே தான் ஆம்;
          வேண்டும் உருவம் ஆம்; விரும்பி நின்ற
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும்(ம்) ஆம்;
       பால் நிறமும் ஆம்; பரஞ்சோதி தான் ஆம்;
தொத்து ஆம் அமரர்கணம் சூழ்ந்து போற்றத்
      தோன்றாது, என் உள்ளத்தின் உள்ளே நின்ற
கத்து ஆம்; அடியேற்குக் காணா காட்டும் கண்
                  ஆம்-கருகாவூர் எந்தைதானே.
உரை
   
150பூத் தான் ஆம்; பூவின் நிறத்தானும்(ம்) ஆம்;
            பூக்குளால் வாசம் ஆய் மன்னி நின்ற
கோத் தான் ஆம்; கோல் வளையாள் கூறன்
       ஆகும்; கொண்ட சமயத்தார் தேவன் ஆகி,
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான்
              ஆம்; என் நெஞ்சத்துள்ளே நின்று
காத்தான் ஆம், காலன் அடையா வண்ணம்;
             கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
உரை
   
151இரவன் ஆம்; எல்லி நடம் ஆடி(ய்) ஆம்; எண்
      திசைக்கும் தேவன் ஆம்; என் உளான் ஆம்;
அரவன் ஆம்; அல்லல் அறுப்பானும்(ம்) ஆம்;
            ஆகாசமூர்த்தி ஆம்; ஆன் ஏறு ஏறும்
குரவன் ஆம்; கூற்றை உதைத்தான் தான் ஆம்;
               கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
கரவன் ஆம்; காட்சிக்கு எளியானும்(ம்) ஆம்; கண்
                   ஆம்-கருகாவூர் எந்தைதானே.
உரை
   
152படைத்தான் ஆம்; பாரை இடந்தான் ஆகும்; பரிசு
           ஒன்று அறியாமை நின்றான் தான் ஆம்;
உடைத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்
                அழலால் மூட்டி ஒடுக்கி நின்று(வ்)
அடைத்தான் ஆம், சூலம் மழு; ஓர் நாகம்
   அசைத்தான் ஆம்; ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்;
கடைத்தான் ஆம், கள்ளம் அறுவார் நெஞ்சின்;
               கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
உரை
   
153மூலன் ஆம்; மூர்த்தி ஆம்; முன்னே தான் ஆம்;
             மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்;
சீலன் ஆம்; சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன்
        ஆம்; செஞ்சுடர்க்கு ஓர் சோதி தான் ஆம்;
மாலன் ஆம்; மங்கை ஓர்பங்கன் ஆகும்; மன்று
          ஆடி ஆம்; வானோர் தங்கட்கு எல்லாம்
காலன் ஆம்; காலனைக் காய்ந்தான் ஆகும்; கண்
                   ஆம்-கருகாவூர் எந்தைதானே.
உரை
   
154அரை சேர் அரவன் ஆம்; ஆலத்தான் ஆம்;
       ஆதிரை நாளான் ஆம்; அண்ட வானோர்
திரை சேர் திருமுடித் திங்களான் ஆம்; தீவினை
               நாசன், என் சிந்தையான் ஆம்;
உரை சேர் உலகத்தார் உள்ளானும்(ம்) ஆம்;
        உமையாள் ஓர்பாகன் ஆம்; ஓத வேலிக்
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும்;
            கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
உரை
   
155துடி ஆம்; துடியின் முழக்கம் தான் ஆம்;
    சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்;
படிதான் ஆம்; பாவம் அறுப்பான் ஆகும்; பால்
              நீற்றன் ஆம்; பரஞ்சோதிதான் ஆம்;
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும்;
               கூறாத வஞ்சக் குயலர்க்கு என்றும்
கடியான் ஆம்; காட்சிக்கு அரியான் ஆகும்;
             கண் ஆம்-கருகாவூர் எந்தைத்தானே.
உரை
   
156விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம்;
          விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்;
பட்டு, உருவ மால்யானைத் தோல் கீண்டான் ஆம்;
           பல பலவும் பாணி பயின்றான் தான் ஆம்;
எட்டு உருவ-மூர்த்தி ஆம், எண்தோளான் ஆம்;
         என் உச்சி மேலான் ஆம்; எம்பிரான் ஆம்;
கட்டு உருவம் கடியானைக் காய்ந்தான் ஆகும்;
                கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
உரை
   
157பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான் ஆகி, உள்
       இருந்து, அங்கு உள்-நோய் களைவான் தானாய்,
செறுத்திருந்த மும் மதில்கள் மூன்றும் வேவச் சிலை
              குனியத் தீ மூட்டும் திண்மையான் ஆம்;
அறுத்திருந்த கையான் ஆம், அம் தார் அல்லி
          இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கி;
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்;
                 கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
உரை
   
158ஒறுத்தான் ஆம், ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்
                   அழலை மாட்டி; உடனே வைத்து(வ்)
இறுத்தான் ஆம், எண்ணான் முடிகள் பத்தும்;
     இசைந்தான் ஆம்; இன் இசைகள் கேட்டான் ஆகும்;
அறுத்தான் ஆம், அஞ்சும் அடக்கி; அங்கே
                  ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்;
கறுத்தான் ஆம், காலனைக் காலால் வீழ;
                   கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.
உரை