6.17 திருஇடைமருது
திருத்தாண்டகம்
169ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்; அழகர்;
         படை உடையர்; அம் பொன்தோள் மேல்
நீறு தடவந்து, இடபம் ஏறி, நித்தம்
                 பலி கொள்வர்; மொய்த்த பூதம்
கூறும் குணம் உடையர்; கோவணத்தர்; கோள்
           தால வேடத்தர்; கொள்கை சொல்லின்,
ஈறும் நடுவும் முதலும் ஆவார்-இடைமருது
                     மேவி இடம் கொண்டாரே.
உரை
   
170மங்குல் மதி வைப்பர்; வான நாடர்; மடமான்
                  இடம் உடையர்; மாதராளைப்
பங்கில் மிக வைப்பர்; பால் போல் நீற்றர்;
             பளிக்குவடம் புனைவர்; பாவநாசர்;
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர்;
       சரிதை பல உடையர்; தன்மை சொல்லின்,
எங்கும் பலி திரிவர்; என் உள் நீங்கார்-இடைமருது
                    மேவி இடம்கொண்டாரே.
உரை
   
171ஆல நிழல் இருப்பர்; ஆகாயத்தர்; அரு
         வரையின் உச்சியர்; ஆணர்; பெண்ணர்;
காலம்பல கழித்தார்; கறை சேர் கண்டர்;
      கருத்துக்குச் சேயார், தாம், காணாதார்க்கு;
கோலம்பல உடையர்; கொல்லை ஏற்றர்;
         கொடு மழுவர்; கோழம்பம் மேய ஈசர்;
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார்-இடைமருது
                     மேவி இடம்கொண்டாரே.
உரை
   
172தேசர்; திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர்;
                  திரு ஆரூர் என்றும் உள்ளார்;
வாசம், மலரின்கண்; மான்தோல் போர்ப்பர்;
             மருவும் கரி உரியர்; வஞ்சக் கள்வர்;
நேசர், அடைந்தார்க்கு; அடையாதார்க்கு
     நிட்டுரவர்; கட்டங்கர்; நினைவார்க்கு என்றும்
ஈசர்; புனல் பொன்னித்தீர்த்தர்-வாய்த்த
           இடைமருது மேவி இடம் கொண்டாரே.
உரை
   
173கரப்பர், கரிய மனக் கள்வர்க்கு; உள்ளம்
            கரவாதே தம் நினையகிற்பார் பாவம்
துரப்பர்; தொடு கடலின் நஞ்சம் உண்பர்;
            தூய மறை மொழியார்; தீயால் ஒட்டி
நிரப்பர்; புரம் மூன்றும் நீறு செய்வர்; நீள்
     சடையர்; பாய்விடை கொண்டு எங்கும் ஐயம்
இரப்பர்; எமை ஆள்வர்; என் உள்
   நீங்கார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே.
உரை
   
174கொடி ஆர் இடபத்தர்; கூத்தும் ஆடி, குளிர்
       கொன்றை மேல் வைப்பர்; கோலம் ஆர்ந்த
பொடி ஆரும் மேனியர்; பூதிப் பையர்;
       புலித்தோலர்; பொங்கு அரவர்; பூண நூலர்;
அடியார் குடி ஆவர்; அந்தணாளர் ஆகுதியின்
                   மந்திரத்தார்; அமரர் போற்ற
இடி ஆர் களிற்று உரியர்-எவரும் போற்ற
           இடைமருது மேவி இடம் கொண்டாரே.
உரை
   
175பச்சைநிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்;
                 பிழைஎல்லாம் நீக்கி ஆள்வர்;
கச்சைக் கதம் நாகம் பூண்ட தோளர்; கலன் ஒன்று
                 கை ஏந்தி, இல்லம் தோறும்
பிச்சைக் கொள நுகர்வர்; பெரியர், சால; பிறங்கு
                 சடைமுடியர்; பேணும் தொண்டர்
இச்சை மிக அறிவர்; என்றும் உள்ளார்-இடைமருது
                 மேவி இடம் கொண்டாரே.
உரை
   
176கா ஆர் சடைமுடியர்; காரோணத்தர்; கயிலாயம்
                மன்னினார்; பன்னும் இன்சொல்
பா ஆர் பொருளாளர்; வாள் ஆர் கண்ணி
           பயிலும் திரு உருவம் பாகம் மேயார்;
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர்; புரம்
         மூன்றும் ஒள் அழலாக் காயத் தொட்ட
ஏ ஆர் சிலை மலையர்; எங்கும், தாமே;-இடைமருது
                    மேவி இடம் கொண்டாரே.
உரை
   
177புரிந்தார், நடத்தின்கண்; பூதநாதர்; பொழில் 
          ஆரூர் புக்கு உறைவர்; போந்து தம்மில்
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் 
            பிரியார், ஒரு நாளும்; பேணு காட்டில்
எரிந்தார் அனல்,-உகப்பர்,-ஏழில் ஓசை; எவ் 
          இடத்தும் தாமே என்று ஏத்துவார் பால்
இருந்தார்-இமையவர்கள் போற்ற என்றும் 
           இடைமருது மேவி இடம் கொண்டாரே.
உரை
   
178விட்டு இலங்கு மா மழுவர்; வேலை நஞ்சர்; 
   விடங்கர்; விரிபுனல் சூழ் வெண்காட்டு உள்ளார்;
மட்டு இலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர்; 
               மழபாடியுள் உறைவர்; மாகாளத்தர்;
சிட்டு இலங்கு வல் அரக்கர் கோனை அன்று 
   செழு முடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால்
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார், 
   வென்றி;- இடைமருது மேவி இடம் கொண்டாரே.
உரை