6.18 திருப்பூவணம்
திருத்தாண்டகம்
179வடி ஏறு திரிசூலம் தோன்றும் தோன்றும்; வளர் 
       சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்;
கடி ஏறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்; 
      காதில் வெண் குழைதோடு கலந்து தோன்றும்;
இடி ஏறு களிற்று உரிவைப்போர்வை தோன்றும்; 
    எழில் திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடி ஏறு திருமேனி பொலிந்து தோன்றும்-பொழில் 
           திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை
   
180ஆண் ஆகிப் பெண் ஆய வடிவு தோன்றும்; 
    அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆகித் தோன்றும்;
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகித் தோன்றும்; 
    ஒற்றை வெண் பிறை தோன்றும்; பற்றார் தம்மேல்
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும்; 
         செத்தவர்தம் எலும்பினால் செறியச் செய்த
பூண் நாணும் அரை நாணும் பொலிந்து தோன்றும்-
    பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை
   
181கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் 
         மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று
சொல் ஆகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்; 
    சூழ் அரவும், மான்மறியும், தோன்றும் தோன்றும்;
அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்; 
   ஐவகையால் நினைவார் பால் அமர்ந்து தோன்றும்;
பொல்லாத புலால் எலும்பு பூண் ஆய்த் தோன்றும்-
    பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை
   
182படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும்; 
     பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்;
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும்; 
  நால்மறையின் ஒலி தோன்றும்; நயனம் தோன்றும்;
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும்; 
      ஊரல் வெண் சிரமாலை உலாவித் தோன்றும்;
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்-
   பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை
   
183மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும், 
    மாசு இலாப் புன்சடைமேல் மதியம் தோன்றும்;
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும்; இருங்கடல் 
      நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்;
கயல் பாயக் கடுங் கலுழிக் கங்கை நங்கை ஆயிரம் 
         ஆம் முகத்தினொடு வானில்- தோன்றும்.
புயல் பாயச் சடை விரித்த பொற்புத் தோன்றும்-
    பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை
   
184பார் ஆழி வட்டத்தார் பரவி இட்ட பல்மலரும்,
                நறும்புகையும், பரந்து தோன்றும்;
சீர் ஆழித் தாமரையின்மலர்கள் அன்னதிருந்திய
                மா நிறத்த சேவடிகள் தோன்றும்;
ஓர் ஆழித் தேர் உடைய இலங்கை வேந்தன் உடல்
       துணித்த இடர் பாவம் கெடுப்பித்து, அன்று,
போர் ஆழி முன் ஈந்த பொற்புத் தோன்றும்-பொழில்
           திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை
   
185தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும்;
    சதுர்முகனைத் தலை அரிந்த தன்மை தோன்றும்;
மின் அனைய நுண் இடையாள் பாகம் தோன்றும்;
   வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தல் தோன்றும்;
துன்னிய செஞ்சடை மேல் ஓர் புனலும் பாம்பும் 
         தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்;
பொன் அனைய திருமேனி பொலிந்து தோன்றும்-
    பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை
   
186செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்;
        திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்;
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்;
    நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்;
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்;
       மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்;
பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்-
     பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை
   
187அருப்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும்;
    அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்-
மருப்பு ஓட்டு மணிவயிரக்கோவை தோன்றும்; மணம்
      மலிந்த நடம் தோன்றும்; மணி ஆர் வைகைத்
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும்;
       செக்கர்வான் ஒளி மிக்குத் திகழ்ந்த சோதிப்
பொருப்பு ஓட்டி நின்ற திண்புயமும் தோன்றும்-
   பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை
   
188ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி, அன்று, தன் 
       முடிமேல் அலர்மாலை அளித்தல் தோன்றும்;
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி, அன்று,
       பலபிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்;
கோங்கு அணைந்த கூவிளமும் மதமத்த(ம்)மும் குழற்கு
      அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்;
ங்கணை வேள் உரு அழித்த பொற்புத் தோன்றும்-
   பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை
   
189ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அவ் உரு 
              ஆய் நிற்கின்ற அருளும் தோன்றும்;
வார் உருவப்பூண் முலை நல் மங்கை தன்னை 
  மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்;
நீர் உருவக் கடல் இலங்கை அரக்கர் கோனை
   நெறு நெறு என அடர்த்திட்ட நிலையும் தோன்றும்;
போர் உருவக் கூற்று உதைத்த பொற்புத் தோன்றும்-
    பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.
உரை