6.21 திருஆக்கூர்த் தான்தோன்றிமாடம்
திருத்தாண்டகம்
211முடித் தாமரை அணிந்த மூர்த்தி போலும்; மூ
              உலகும் தாம் ஆகி நின்றார் போலும்;
கடித்தாமரை ஏய்ந்த கண்ணார் போலும்;
               கல்லலகு பாணி பயின்றார் போலும்;
கொடித் தாமரைக்காடே நாடும் தொண்டர்
         குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்;
அடித்தாமரை மலர் மேல் வைத்தார்
     போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
உரை
   
212ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும்;
        உணரப்படாதது ஒன்று இல்லை போலும்;
காதில் குழை இலங்கப் பெய்தார் போலும்;
     கவலை, பிறப்பு, இடும்பை, காப்பார் போலும்;
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும்;
      விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்;
ஆதிக்கு அளவு ஆகி நின்றார்
   போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
உரை
   
213மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர் போலும்; மணி
                  நீலகண்டம் உடையார் போலும்;
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும்; நீறு
            ஏறு தோள் எட்டு உடையார் போலும்;
வை ஆர் மழுவாள் படையார் போலும்;
          வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்;
ஐவாய் அரவம் ஒன்று ஆர்த்தார்
    போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
உரை
   
214வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும்;
        வஞ்சக் கருங்கடல் நஞ்சு உண்டார் போலும்;
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும்; பூங்
               கங்கை தோய்ந்த சடையார் போலும்;
கடி விளங்கு கொன்றை அம்தரார் போலும்;
               கட்டங்கம் ஏந்திய கையார் போலும்;
அடி விளங்கு செம் பொன்கழலார்
      போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
உரை
   
215ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ, இடு
                வெண்தலை கலனா ஏந்தி, நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளிமாலை புனல்
         ஆர் சடைமுடிமேல் புனைந்தார் போலும்;
மா காசம் ஆய வெண்நீரும், தீயும், மதியும்,
                மதி பிறந்த விண்ணும், மண்ணும்,
ஆகாசம், என்று இவையும் ஆனார்
    போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
உரை
   
216மாது ஊரும் வாள் நெடுங்கண், செவ்வாய், மென்தோள்,
          மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்;
மூதூர், முதுதிரைகள், ஆனார் போலும்; முதலும்
                        இறுதியும் இல்லார் போலும்;
தீது ஊரா நல்வினை ஆய் நின்றார் போலும்; திசை
              எட்டும் தாமே ஆம் செல்வர் போலும்;
ஆதிரைநாள் ஆய் அமர்ந்தார் போலும்-ஆக்கூரில்-தான்
                               தோன்றி அப்பனாரே.
உரை
   
217மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்;
         மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்;
கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்;
       குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்;
காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம்
               தம் இடமாக் கொண்டார் போலும்;
ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார்
    போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
உரை
   
218கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்;
      காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்;
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்;
                 ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்;
எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு
                  ஏறிச் செல்லும் இறைவர் போலும்;
அண்ணாவும், ஆரூரும், மேயார்
       போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
உரை
   
219கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை, கதிர்
            போது, தாது அணிந்த கண்ணி போலும்;
நெடியானும் சது முகனும் நேட நின்ற, நீல நல்
                    கண்டத்து, இறையார் போலும்;
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன்மேனி
     மணிவண்ணம், தம் வண்ணம் ஆவார் போலும்;
அடியார் புகல் இடம் அது ஆனார்
     போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
உரை
   
220திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து,
           அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர்
                ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்;
கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ
                        அன்ன கனலார் போலும்;
வரை ஆர் மதில் எய்த வண்ணர்
      போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
உரை