6.24 திருஆரூர்
திருத்தாண்டகம்
242கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
    கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான் காண்;
அம்மான்காண்; ஆடு அரவு ஒன்று ஆட்டினான்காண்;
      அனல் ஆடிகாண்; அயில்வாய்ச்சூலத்தான்காண்;
எம்மான்காண்; ஏழ் உலகும் ஆயினான்காண்;
       எரிசுடரோன்காண்; இலங்கும் மழுவாளன்காண்;
செம் மானத்து ஒளி அன்ன மேனியான்காண்-திரு
                 ஆரூரான்காண், என் சிந்தையானே.
உரை
   
243ஊன் ஏறு படுதலையில் உண்டியான்காண்;
        ஓங்காரன்காண்; ஊழி முதல் ஆனான்காண்;
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறான்காண்;
    அண்டன்காண்; அண்டத்துக்கு அப்பாலன்காண்;
மான் ஏறு கரதலத்து எம் மணிகண்டன்காண்; மா
  தவன்காண்; மா தவத்தின் விளைவு ஆனான்காண்;
தேன் ஏறும் மலர்க்கொன்றைக்கண்ணியான்காண்-திரு
               ஆரூரான்காண், என் சிந்தையானே.
உரை
   
244ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான்காண்;
     இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன்தான்காண்;
தூ வணத்த சுடர்ச் சூலப்படையினான்காண்;
    சுடர்மூன்றும் கண் மூன்றாக் கொண்டான் தான்காண்;
ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண்;
  அனல் ஆடிகாண்; அடியார்க்கு அமிர்து ஆனான்காண்;
தீவணத்த திரு உருவின் கரி உருவன்காண்-திரு
                  ஆரூரான்காண், என் சிந்தையானே.
உரை
   
245கொங்கு வார் மலர்க்கண்ணிக் குற்றாலன்காண்;
    கொடுமழுவன்காண்; கொல்லைவெள் ஏற்றான்காண்;
எங்கள்பால்-துயர் கெடுக்கும் எம்பிரான்காண்;
             ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான்காண்;
பொங்கு மா கருங்கடல் நஞ்சு உண்டான் தான்காண்;
   பொன் தூண் காண்; செம்பவளத்திரள் போல்வான்காண்;
செங்கண் வாள் அரா, மதியோடு உடன்
  வைத்தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
உரை
   
246கார் ஏறு நெடுங்குடுமிக் கயிலாயன்காண்;
     கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான்காண்;
போர் ஏறு நெடுங்கொடி மேல் உயர்த்தினான்காண்;
  புண்ணியன்காண்; எண்ண(அ)ரும் பல் குணத்தினான்காண்;
நீர் ஏறு சுடர்ச் சூலப்படையினான்காண்;
    நின்மலன்காண்; நிகர் ஏதும் இல்லாதான்காண்;
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான்காண்-திரு
              ஆரூரான்காண், என் சிந்தையானே.
உரை
   
247பிறை அரவக் குறுங்கண்ணிச் சடையினான்காண்;
  பிறப்பு இலிகாண்; பெண்ணோடு ஆண் ஆயினான்காண்;
கறை உருவ மணிமிடற்று வெண் நீற்றான்காண்;
       கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீகாண்;
இறை உருவக் கனவளையாள் இடப்பாகன்காண்; இரு
     நிலன்காண்; இரு நிலத்துக்கு இயல்பு ஆனான்காண்;
சிறை உருவக் களி வண்டு ஆர் செம்மையான்காண்-திரு
                    ஆரூரான்காண், என் சிந்தையானே.
உரை
   
248தலை உருவச் சிரமாலை சூடினான்காண்; தமர்
     உலகம் தலை கலனாப் பலி கொள்வான் காண்;
அலை உருவச் சுடர் ஆழி ஆக்கினான்காண்; அவ்
             ஆழி நெடுமாலுக்கு அருளினான்காண்;
கொலை உருவக் கூற்று உதைத்த கொள்கையான்காண்;
    கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான்காண்;
சிலை உருவச் சரம் துரந்த திறத்தினான்காண்-திரு
               ஆரூரான்காண், என் சிந்தையானே.
உரை
   
249ஐயன்காண், குமரன்காண், ஆதியான்காண்; அடல்
             மழுவாள் தான் ஒன்று பியில்மேல் ஏந்து
கையன்காண்; கடல் பூதப் படையினான்காண்; கண்
      எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான்காண்;
வெய்யன்காண்; தண்புனல் சூழ் செஞ்சடையான்காண்;
  வெண் நீற்றான்காண்; விசயற்கு அருள் செய்தான்காண்;
செய்யன்காண்; கரியன்காண்; வெளியோன்
     தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
உரை
   
250மலை வளர்த்த மடமங்கை பாகத்தான்காண்;
          மயானத்தான்காண்; மதியம் சூடினான்காண்;
இலை வளர்த்த மலர்க்கொன்றை மாலையான்காண்;
  இறையவன்காண்; எறிதிரை நீர்நஞ்சு உண்டான்காண்;
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான்காண்;
   கொடுங்குன்றன்காண்; கொல்லை ஏற்றினான் காண்;
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான்காண்-திரு
                 ஆரூரான்காண், என் சிந்தையானே.
உரை
   
251பொன்தாது மலர்க்கொன்றை சூடினான்காண்;
     புரிநூலன்காண்; பொடி ஆர் மேனியான்காண்;
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான்காண்;
    மறை ஓதி காண்; எறிநீர் நஞ்சு உண்டான்காண்;
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான்காண்-;
   இறையவன்காண்; மறையவன்காண்; ஈசன் தான்காண்;
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்
    தான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.
உரை