6.34 திருஆரூர்
திருத்தாண்டகம்
340ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ? ஓர்
            உருவே மூ உருவம் ஆன நாளோ?
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ?
    காமனையும் கண் அழலால் விழித்த நாளோ?
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த
 நாளோ? மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ?
        திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
உரை
   
341மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ?
        வானவரை வலி அமுதம் ஊட்டி, அந் நாள்
நிலை பேறு பெறுவித்து நின்ற நாளோ? நினைப்ப
      (அ)ரிய தழல் பிழம்பு ஆய் நிமிர்ந்த நாளோ?
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ?
         அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ?
சிலையால் முப்புரம் எரித்த முன்னோ? பின்னோ?
           திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
உரை
   
342பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும்
  நீயும் போய் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ?
  விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ?
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி
         திகழும் அம்பலத்தை மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ? பின்னோ?
      அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
உரை
   
343ஓங்கி-உயர்ந்து எழுந்து நின்ற நாளோ? ஓர்
      உகம் போல் ஏழ் உகம் ஆய் நின்ற நாளோ?
தாங்கிய சீர்த் தலை ஆன வானோர் செய்த
      தக்கன் தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ?
நீங்கிய நீர்த் தாமரையான் நெடு மாலோடு,
   “நில்லாய், எம்பெருமானே!” என்று அங்கு ஏத்தி,
வாங்கி, மதி, வைப்பதற்கு முன்னோ? பின்னோ?
         வளர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
உரை
   
344பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே!
    பணிவார்கட்கு அங்கு அங்கே பற்று ஆனானே!
நீல மாமணி கண்டத்து எண் தோளானே! நெரு
            நலையாய் இன்று ஆகி நாளை ஆகும்
சீலமே! சிவலோக நெறியே ஆகும் சீர்மையே!
                      கூர்மையே! குணமே! நல்ல
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ? பின்னோ?
         குளிர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
உரை
   
345திறம் பலவும் வழி காட்டிச் செய்கை காட்டிச்
          சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ?
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா
  முனிவர்க்கு அருள் செய்து அங்கு இருந்த நாளோ?
பிறங்கிய சீர்ப் பிரமன் தன் தலை கை ஏந்திப்
        பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ?
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ? பின்னோ?
          அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
உரை
   
346நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ?
             நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக்
கலந்து உரைக்கக் கற்பகம் ஆய் நின்ற நாளோ?
        காரணத்தால் நாரணனைக் கற்பித்து, அன்று,
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ,
          வாசுகியை வாய் மடுத்து, வானோர் உய்ய,
சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ? பின்னோ?
          தண் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
உரை
   
347பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப் பார்
         அகத்தே பரஞ்சுடர் ஆய் நின்ற நாளோ?
கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும்
      கேடு இலா வான் உலகம் கொடுத்த நாளோ?
பூதத்தான், பொரு நீலி, புனிதன், மேவிப் பொய்
   உரையா மறை நால்வர், விண்ணோர்க்கு, என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ? பின்னோ?
        விழவு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
உரை
   
348புகை எட்டும், போக்கு எட்டும், புலன்கள் எட்டும்,
      பூதலங்கள் அவை எட்டும், பொழில்கள் எட்டும்,
கலை எட்டும், காப்பு எட்டும், காட்சி எட்டும், கழல்
             சேவடி அடைந்தார் களை கண் எட்டும்,
நகை எட்டும், நாள் எட்டும், நன்மை எட்டும், நலம்
          சிறந்தார் மனத்து அகத்து மலர்கள் எட்டும்,
திகை எட்டும், தெரிப்பதற்கு முன்னோ? பின்னோ?
            திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
உரை
   
349ஈசனாய், உலகு ஏழும் மலையும் ஆகி,
    இராவணனை ஈடு அழித்திட்டு, இருந்த நாளோ?
வாசமலர் மகிழ் தென்றல் ஆன நாளோ?
        மதயானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ?
தாது மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ?
     சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ?
தேசம் உமை அறிவதற்கு முன்னோ? பின்னோ?
          திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.
உரை