6.37 திருஐயாறு
திருத்தாண்டகம்
370“ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி!
                    ஆரமுதே!” என்றேன், நானே;
“கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்திக் குறள்
            பூதப்பல் படையாய்!” என்றேன், நானே;
“பேர் ஆயிரம் உடையாய்!” என்றேன், நானே;
       “பிறை சூடும் பிஞ்ஞகனே!” என்றேன், நானே;
“ஆரா அமுதே! என் ஐயாற(ன்)னே!” என்று என்றே
                     நான் அரற்றி நைகின்றேனே!.
உரை
   
371“தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா!
                   புராணனே!” என்றேன், நானே;
“மூவா மதிசூடி!” என்றேன், நானே; “முதல்வா!
               முக்கண்ணனே!” என்றேன், நானே;
“ஏ ஆர் சிலையானே!” என்றேன், நானே;
             இடும்பைக்கடல் நின்றும் ஏற வாங்கி,
“ஆவா!” என்று அருள்புரியும் ஐயாற(ன்)னே!”
        என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
உரை
   
372“அம் சுண்ண வண்ணனே!” என்றேன், நானே;
   “அடியார்கட்கு ஆர் அமுதே!” என்றேன், நானே;
“நஞ்சு அணி கண்டனே!” என்றேன், நானே;
      “நாவலர்கள் நால்மறையே!” என்றேன், நானே;
“நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும்
                   அமுதமே!” என்றேன், நானே;
“அஞ்சாதே ஆள்வானே! ஐயாற(ன்)னே!” என்று
             என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
உரை
   
373“தொல்லைத் தொடு கடலே!” என்றேன், நானே;
      “துலங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே;
“எல்லை நிறைந்தானே!” என்றேன், நானே;
    “ஏழ்நரம்பின் இன் இசையாய்!” என்றேன், நானே;
“அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி
               அருள்செய்தாய்!” என்றேன், நானே;
“எல்லை ஆம் ஐயாறா!” என்றேன், நானே; என்று
              என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
உரை
   
374“இண்டைச் சடைமுடியாய்!” என்றேன், நானே;
         “இருசுடர் வானத்தாய்!” என்றேன், நானே;
“தொண்டர் தொழப்படுவாய்!” என்றேன், நானே;
     “துருத்தி நெய்த்தானத்தாய்!” என்றேன், நானே;
“கண்டம் கறுத்தானே!” என்றேன், நானே; “கனல்
           ஆகும் கண்ணானே!” என்றேன், நானே;
“அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாற(ன்)னே!”
       என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
உரை
   
375“பற்றார் புரம் எரித்தாய்!” என்றேன், நானே;
           “பசுபதீ! பண்டரங்கா!” என்றேன், நானே;
“கற்றார்கள் நாவினாய்!” என்றேன், நானே; “கடு
       விடை ஒன்று ஊர்தியாய்!” என்றேன், நானே;
“பற்று ஆனார் நெஞ்சு உளாய்!” என்றேன், நானே;
    “பார்த்தற்கு அருள்செய்தாய்!” என்றேன், நானே;
“அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாற(ன்)னே!” என்று
              என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
உரை
   
376“விண்ணோர் தலைவனே!” என்றேன், நானே;
     “விளங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே;
“எண்ணார் எயில் எரித்தாய்!” என்றேன், நானே;
          “ஏகம்பம் மேயானே!” என்றேன், நானே;
“பண் ஆர் மறை பாடி!” என்றேன், நானே;
          “பசுபதீ! பால்நீற்றாய்!” என்றேன், நானே;
“அண்ணா! ஐயாறனே!” என்றேன், நானே; என்று
             என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
உரை
   
377“அவன்” என்று நான் உன்னை அஞ்சாதேனை
         “அல்லல் அறுப்பானே!” என்றேன், நானே;
“சிவன்” என்று நான் உன்னை எல்லாம் சொல்ல,
          “செல்வம் தருவானே!” என்றேன், நானே;
“பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று
      பண்டைவினை அறுப்பாய்!” என்றேன், நானே;
“அவன்” என்றே, “ஆதியே! ஐயாற(ன்)னே!”என்று
              என்றே நான் அரற்றி நைகின்றேனே!
உரை
   
378“கச்சி ஏகம்பனே!” என்றேன், நானே; “கயிலாயா!
                    காரோணா!” என்றேன், நானே;
“நிச்சல் மணாளனே!” என்றேன், நானே; “நினைப்பார்
                மனத்து உளாய்!” என்றேன், நானே;
“உச்சம் போது ஏறு ஏறீ!” என்றேன், நானே;
        “உள்குவார் உள்ளத்தாய்!” என்றேன், நானே;
“அச்சம் பிணி தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்று
               என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
உரை
   
379“வில் ஆடி வேடனே!” என்றேன், நானே; “வெண்நீறு
               மெய்க்கு அணிந்தாய்!” என்றேன், நானே;
“சொல் ஆய சூழலாய்!” என்றேன், நானே; “சுலா
               ஆய தொன்னெறியே!” என்றேன், நானே;
“எல்லாம் ஆய் என் உயிரே!” என்றேன், நானே;
   “இலங்கையர்கோன் தோள் இறுத்தாய்!” என்றேன், நானே;
“அல்லா வினை தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்றுஎன்றே
                         நான் அரற்றி நைகின்றேனே!.
உரை