6.39 திருமழபாடி
திருத்தாண்டகம்
391நீறு ஏறு திருமேனி உடையான் கண்டாய்; நெற்றிமேல்
                ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்;
கூறுஆக உமை பாகம் கொண்டான் கண்டாய்;
  கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்;
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய்; ஏழ் உலகும்
                  ஏழ்மலையும் ஆனான் கண்டாய்;
மாறு ஆனார் தம் அரணம் அட்டான் கண்டாய்
                 மழபாடி மன்னும் மணாளன்தானே.
உரை
   
392கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்;
         கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய்;
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய்;
           அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய்;
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய்;
    அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்;
மற்று இருந்த கங்கைச் சடையான் கண்டாய் மழபாடி
                      மன்னும் மணாளன் தானே.
உரை
   
393நெற்றித் தனிக் கண் உடையான் கண்டாய்; நேரிழை
              ஓர் பாகம் ஆய் நின்றான் கண்டாய்;
பற்றிப் பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய்; பல் ஊர்
                     பலி தேர் பரமன் கண்டாய்;
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய்; செழு
            மா மதி சென்னி வைத்தான் கண்டாய்;
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி
                      மன்னும் மணாளன் தானே.
உரை
   
394அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்;
   அண்டத்துக்கு அப்பால் ஆய் நின்றான் கண்டாய்;
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய்; கொல்
      வேங்கைத் தோல் ஒன்று உடுத்தான் கண்டாய்;
சிலையால்-திரிபுரங்கள் செற்றான் கண்டாய்; செழு
             மா மதி சென்னி வைத்தான் கண்டாய்;
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி
                      மன்னும் மணாளன் தானே.
உரை
   
395உலந்தார் தம் அங்கம் அணிந்தான் கண்டாய்;
   உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய்;
நலம் திகழும் கொன்றைச் சடையான் கண்டாய்;
       நால்வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்;
உலந்தார் தலை கலனாக் கொண்டான் கண்டாய்;
              உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த
                மழபாடி மன்னும் மணாளன் தானே.
உரை
   
396தாமரையான் தன் தலையைச் சாய்த்தான் கண்டாய்;
   தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டாய்;
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்! புணர்ச்சிப்
                     பொருள் ஆகி நின்றான் கண்டாய்;
ஏ மருவு வெஞ்சிலை ஒன்று ஏந்தி கண்டாய்; இருள்
                 ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்;
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி
                           மன்னும் மணாளன் தானே.
உரை
   
397நீர் ஆகி, நெடுவரைகள் ஆனான் கண்டாய்; நிழல்
            ஆகி, நீள் விசும்பும் ஆனான் கண்டாய்;
பார் ஆகி, பௌவம் ஏழ் ஆனான் கண்டாய்; பகல்
             ஆகி, வான் ஆகி, நின்றான் கண்டாய்;
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய்;
        அணு ஆகி, ஆதி ஆய், நின்றான் கண்டாய்;
வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
                மழபாடி மன்னும் மணாளன் தானே.
உரை
   
398பொன் இயலும் திருமேனி உடையான் கண்டாய்;
   பூங்கொன்றைத்தார் ஒன்று அணிந்தான் கண்டாய்;
மின் இயலும் வார்சடை எம்பெருமான் கண்டாய்;
   வேழத்தின் உரி விரும்பிப் போர்த்தான் கண்டாய்;
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய்;
   தாங்க (அ)ரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்;
மன்னிய மங்கை ஓர் கூறன் கண்டாய் மழபாடி
                      மன்னும் மணாளன் தானே.
உரை
   
399ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய்; அடையலர்
             தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய்;
காலால் அக் காலனையும் காய்ந்தான் கண்டாய்;
    கண்ணப்பர்க்கு அருள் செய்த காளை கண்டாய்;
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய்; பசு
              ஏறிப் பலி திரியும் பண்பன் கண்டாய்;
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி
                       மன்னும் மணாளன் தானே.
உரை
   
400ஒரு சுடர் ஆய், உலகு ஏழும் ஆனான் கண்டாய்;
     ஓங்காரத்து உள் பொருள் ஆய் நின்றான் கண்டாய்;
விரி சுடர் ஆய், விளங்கு ஒளி ஆய், நின்றான் கண்டாய்;
    விழவு ஒலியும், வேள்வொலியும், ஆனான் கண்டாய்;
இரு சுடர் மீது ஓடா இலங்கைக்கோனை ஈடு அழிய
                 இருபது தோள் இறுத்தான் கண்டாய்;
மரு சுடரின் மாணிக்கக் குன்று கண்டாய் மழபாடி
                          மன்னும் மணாளன் தானே.
உரை