6.42 திருநெய்த்தானம்
திருத்தாண்டகம்
418மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
    வேண்டிற்றுக் குறை முடித்து, வினைக்குக் கூடு ஆம்
இத் தானத்து இருந்து, இங்ஙன் உய்வான் எண்ணும்
        இதனை ஒழி! இயம்பக் கேள்: ஏழை நெஞ்சே!
மைத்து ஆன நீள் நயனி பங்கன், வங்கம் வரு திரை
                   நீர் நஞ்சு உண்ட கண்டன், மேய
நெய்த்தான நன்நகர் என்று ஏத்தி நின்று, நினையுமா
                     நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை
   
419“ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை-இது நீங்கல்
                ஆம்; விதி உண்டு” என்று சொல்ல
வேண்டாவே; நெஞ்சமே! விளம்பக் கேள், நீ;
    விண்ணவர் தம் பெருமானார், மண்ணில் என்னை
ஆண்டான், அன்று அரு வரையால் புரம்மூன்று எய்த
         அம்மானை, அரி அயனும் காணா வண்ணம்
நீண்டான், உறை துறை நெய்த்தானம் என்று
          நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை
   
420பரவிப் பலபலவும் தேடி, ஓடி, பாழ் ஆம் குரம்பை
                          இடைக் கிடந்து, வாளா
குரவி, குடிவாழ்க்கை வாழ எண்ணி, குலைகை தவிர்,
                        நெஞ்சே! கூறக் கேள், நீ;
இரவிக்குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த
                           கோடி அமரர் ஆயம்
நிரவிக்க(அ)அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா
                   நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை
   
421அலை ஆர் வினைத் திறம் சேர் ஆக்கையுள்ளே
        அகப்பட்டு, உள் ஆசை எனும் பாசம் தன்னுள்
தலை ஆய், கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து
            தளர்ந்து, மிக, நெஞ்சமே, அஞ்ச வேண்டா!
இலை ஆர் புனக் கொன்றை, எறிநீர், திங்கள்,
   இருஞ்சடைமேல் வைத்து உகந்தான்; இமையோர் ஏத்தும்
நிலையான; உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா
                       நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை
   
422தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம்
   கூட்டைப் பொருள் என்று மிக உன்னி, “மதியால் இந்த
அனைத்து உலகும் ஆளல் ஆம்” என்று பேசும்
          ஆங்காரம் தவிர், நெஞ்சே! அமரர்க்கு ஆக
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற, அன்று,
          முடுகிய வெஞ்சிலை வளைத்து, செந்தீ மூழ்க
நினைத்த பெருங் கருணையன் நெய்த்தானம் என்று
            நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை
   
423மிறை படும் இவ் உடல் வாழ்வை மெய் என்று எண்ணி,
        வினையிலே கிடந்து அழுந்தி, வியவேல், நெஞ்சே!
குறைவு உடையார் மனத்து உளான்; குமரன் தாதை; கூத்து
   ஆடும் குணம் உடையான்; கொலை வேல் கையான்;
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப,
                  அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற
நிறைவு உடையான்; இடம் ஆம் நெய்த்தானம் என்று
               நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை
   
424பேசப் பொருள் அலாப் பிறவி தன்னைப் பெரிது
        என்று உன் சிறு மனத்தால் வேண்டி, ஈண்டு
வாசக்குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு,
                        வீழாதே வருக, நெஞ்சே!
தூசக் கரி உரித்தான்; தூநீறு ஆடித் துதைந்து
              இலங்கு நூல் மார்பன்; தொடரகில்லா
நீசர்க்கு அரியவன்; நெய்த்தானம் என்று நினையுமா
                   நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை
   
425அஞ்சப் புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு,
        அருநோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை
தஞ்சம் எனக் கருதி, தாழேல், நெஞ்சே! தாழக்
                     கருதுதியே? தன்னைச் சேரா
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணிகண்டன்,
             “வானவர் தம் பிரான்!” என்று ஏத்தும்
நெஞ்சர்க்கு இனியவன், நெய்த்தானம் என்று
         நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை
   
426பொருந்தாத உடல் அகத்தின் புக்க ஆவி போம்
       ஆறு அறிந்து அறிந்தே, புலை வாழ்வு உன்னி,
இருந்து, ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா; நெஞ்சே!
   இமையவர் தம் பெருமான்; அன்று உமையாள் அஞ்ச,
கருந்தாள மதகரியை வெருவக் கீறும் கண்ணுதல்;
              கண்டு அமர் ஆடி, கருதார் வேள்வி;
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று
          நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை
   
427உரித்து அன்று, உனக்கு இவ் உடலின் தன்மை;
              உண்மை உரைத்தேன்; விரதம் எல்லாம்
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே! தம்மிடையில்
           இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன்;
எரி(த்)த்தான்; அனல் உடையான்; “எண்தோளானே!
    எம்பெருமான்!” என்று ஏத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை, நெய்த்தானம் மேவினானை, நினையுமா
                    நினைந்தக்கால் உய்யல் ஆமே.
உரை