6.51 திருவீழிமிழலை
திருத்தாண்டகம்
509கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்; கந்த மாதனத்து
                                 உளார்; காளத்தி(ய்)யார்;
மயிலாடு துறை உளார்; மாகாளத்தார்; வக்கரையார்;
                         சக்கரம் மாற்கு ஈந்தார்; வாய்ந்த
அயில்வாய சூலமும், காபால(ம்)மும், அமரும்
                           திருக்கரத்தார்; ஆன் ஏறு ஏறி,
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே
                                          மேவினாரே.
உரை
   
510பூதி அணி பொன்நிறத்தர்; பூணநூலர்; பொங்கு அரவர்;
                         சங்கரர்; வெண்குழை ஓர் காதர்;
கேதிசரம் மேவினார்; கேதாரத்தார்; கெடில வட அதிகை
                                         வீரட்டத்தார்;
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார்; மழபாடி
                                மேய மணவாள(ன்)னார்;
வேதி குடி உளார்; மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே.
உரை
   
511அண்ணாமலை அமர்ந்தார்; ஆரூர் உள்ளார்; அளப்பூரார்;
                         அந்தணர்கள் மாடக்கோயில்
உண்ணாழிகையார், உமையாளோடும்; இமையோர்
                            பெருமானார்; ஒற்றியூரார்;
பெண்ணா கடத்துப் பெருந் தூங்கானை-மாடத்தார்;
                              கூடத்தார்; பேராவூரார்
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே
                                       மேவினாரே.
உரை
   
512வெண்காட்டார்; செங்காட்டங்குடியார்; வெண்ணி நன்நகரார்;
                        வேட்களத்தார்; வேதம் நாவார்;
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார்;
       பராய்த்துறையார்; சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி உரித்து,
                    உரிவை போர்த்த விடலை வேடம்
விண் காட்டும் பிறை நுதலி அஞ்சக் காட்டி,
                          வீழிமிழலையே மேவினாரே.
உரை
   
513புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே
                                  நடம் ஆடு(வ்)வார்;
உடை சூழ்ந்த புலித்தோலர்; கலிக் கச்சி(ம்) மேற்-றளி உளார்;
                           குளிர்சோலை ஏகம்பத்தார்;
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காள(ன்)னார்; கழுமலத்தார்;
                     செழு மலர்த்தார்க் குழலியோடும்
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே
                                       மேவினாரே.
உரை
   
514பெரும் புலியூர் விரும்பினார்; பெரும் பாழி(ய்)யார்; பெரும்
                       பற்றப்புலியூர் மூலட்டானத்தார்;
இரும்புதலார்; இரும்பூளை உள்ளார்; ஏர் ஆர் இன்னம்பரார்;
                        ஈங்கோய் மலையார்; இன்சொல்
கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார்;
                           கருப்பறியலூரார்; கரவீரத்தார்
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே
                                         மேவினாரே.
உரை
   
515மறைக்காட்டார்; வலிவலத்தார்; வாய்மூர் மேயார்; வாழ்கொளி
                                புத்தூரார்; மாகாளத்தார்;
கறை(க்)க்காட்டும் கண்டனார்; காபாலி(ய்)யார்; கற்குடியார்;
                             விற்குடியார்; கானப்பேரார்;
பறை(க்)க்காட்டும் குழிவிழிகண் பல்பேய் சூழப் பழையனூர்
                      ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர்
மிறை(க்)க்காட்டும் கொடுங் காலன் வீடப் பாய்ந்தார்
                           வீழிமிழலையே மேவினாரே.
உரை
   
516அஞ்சைக்களத்து உள்ளார்; ஐயாற்று உள்ளார்; ஆரூரார்;
                        பேரூரார்; அழுந்தூர் உள்ளார்;
தஞ்சைத் தளிக்குளத்தார்; தக்களூரார்; சாந்தை அயவந்தி
                                    தங்கினார் தாம்;
நஞ்சைத் தமக்கு அமுதா உண்ட நம்பர்; நாகேச்சுரத்து
                               உள்ளார்; நாரையூரார்;
வெஞ்சொல் சமண் சிறையில் என்னை மீட்டார்
                         வீழிமிழலையே மேவினாரே.
உரை
   
517கொண்டல் உள்ளார்; கொண்டீச்சுரத்தின் உள்ளார்; கோவலூர்
                          வீரட்டம் கோயில் கொண்டார்;
தண்டலையார்; தலையாலங்காட்டில் உள்ளார்; தலைச்சங்கைப்
                         பெருங்கோயில் தங்கினார் தாம்;
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நன்நீர்
          வலஞ்சுழியார்; வைகலில் மேல்மாடத்து உள்ளார்;
வெண்தலை கைக் கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே
                                        மேவினாரே.
உரை
   
518அரிச்சந்திரத்து உள்ளார்; அம்பர் உள்ளார்; அரிபிரமர்
                         இந்திரர்க்கும் அரியர் ஆனார்;
புரிச்சந்திரத்து உள்ளார்; போகத்து உள்ளார்; பொருப்பு
                   அரையன் மகளோடு விருப்பர் ஆகி
எரிச் சந்தி வேட்கும் இடத்தார்; ஏம-கூடத்தார் பாடத்
                              தேன் இசை ஆர் கீதர்;
விரிச்சு அங்கை எரிக் கொண்டு அங்கு ஆடும் வேடர்
                           வீழிமிழலையே மேவினாரே.
உரை
   
519புன்கூரார்; புறம்பயத்தார்; புத்தூர் உள்ளார்; பூவணத்தார்;
                         புலிவலத்தார்; வலியின் மிக்க
தன் கூர்மை கருதி வரை எடுக்கல் உற்றான் தலைகளொடு
                       மலைகள் அன தாளும் தோளும்
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி, பொருப்பு
            அதன் கீழ் நெரித்து, அருள்செய் புவன நாதர்;
மின் கூரும் சடைமுடியார்; விடையின் பாகர் வீழிமிழலையே
                                         மேவினாரே.
உரை