6.52 திருவீழிமிழலை
திருத்தாண்டகம்
520கண் அவன் காண்; கண் ஒளி சேர் காட்சியான் காண்;
                 கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற
பண் அவன் காண்; பண் அவற்றின் திறம் ஆனான் காண்;
           பழம் ஆகிச் சுவை ஆகிப் பயக்கின்றான் காண்;
மண் அவன் காண்; தீ அவன் காண்; நீர் ஆனான் காண்;
      வந்து அலைக்கும் மாருதன் காண்; மழை மேகம் சேர்
விண் அவன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான்
                 காண் விண் இழி தண் வீழிமிழலையானே.
உரை
   
521ஆலைப் படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சு
                          எழுத்தின் நாமத்தான் காண்;
சீலம் உடை அடியார் சிந்தையான் காண்; திரி புரம் மூன்று
                        எரிபடுத்த சிலையினான் காண்;
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண்; பண்டரங்க
                  வேடன் காண்; பலி தேர்வான் காண்;
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண்
                                  வீழிமிழலையானே.
உரை
   
522தண்மையொடு வெம்மை தான் ஆயினான் காண்; சக்கரம்
                   புள்பாகற்கு அருள்செய்தான் காண்;
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண்; காமன்
                  உடல் வேவித்த கண்ணினான் காண்;
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான்
        காண்; இருவர்க்கு எரி ஆய் அருளினான் காண்;
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி
                            தண் வீழிமிழலையானே.
உரை
   
523காது இசைந்த சங்கக் குழையினான் காண்; கனகமலை
                            அனைய காட்சியான் காண்;
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண்; வல்
                ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண்;
ஆதியன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்;
             ஐந்தலை மாநாகம் நாண் ஆக்கினான் காண்;
வேதியன் காண்; வேதவிதி காட்டினான் காண் விண்
                           இழி தண் வீழிமிழலையானே.
உரை
   
524நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண்; நித்தமணவாளன்
                                 என நிற்கின்றான் காண்;
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண்; காலன் உயிர்
                              காலால் கழிவித்தான் காண்;
செய்ய திருமேனியில் வெண்நீற்றினான் காண்; செஞ்சடைமேல்
                       வெண்மதியம் சேர்த்தினான் காண்;
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண்
                                     வீழிமிழலையானே.
உரை
   
525கண் துஞ்சும் கரு நெடுமால் ஆழி வேண்டி, கண் இடந்து,
                    சூட்ட, கண்டு அருளுவான் காண்;
வண்டு உண்ணும் மதுக் கொன்றை, வன்னி, மத்தம்,
          வான்கங்கை, சடைக் கரந்த மாதேவன் காண்;
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண்; பரமன்
                  காண்; பரமேட்டி ஆயினான் காண்;
வெண்திங்கள் அரவொடு செஞ்சடை வைத்தான் காண்
                 விண் இழி தண் வீழிமிழலை யானே.
உரை
   
526கல்பொலி தோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக்கு
                    அருள்செய்த கருணையான் காண்;
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண்;
       வேடுவனாய்ப் போர் பொருது காட்டினான் காண்;
தற்பரம் ஆய் நற்பரம் ஆய் நிற்கின்றான் காண்;
       சதாசிவன் காண்; தன் ஒப்பார் இல்லாதான் காண்;
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண்
                        இழி தண் வீழிமிழலையானே.
உரை
   
527மெய்த்தவன் காண், மெய்த்தவத்தில் நிற்பார்க்கு எல்லாம்;
         விருப்பு இலா இருப்புமன வினையர்க்கு என்றும்
பொய்த்தவன் காண்; புத்தன் மறவாது ஓடி எறி சல்லி
                      புதுமலர்கள் ஆக்கினான் காண்;
உய்த்தவன் காண், உயர் கதிக்கே உள்கினாரை; உலகு
     அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்யச் செய்யும்
வித்தகன் காண் வித்தகர் தாம் விரும்பி ஏத்தும் விண்
                        இழி தண் வீழிமிழலையானே.
உரை
   
528சந்திரனைத் திருவடியால்-தளர்வித்தான் காண்; தக்கனையும
              முனிந்து எச்சன் தலை கொண்டான் காண்;
இந்திரனைத் தோள் முறிவித்து அருள் செய்தான் காண்;
     ஈசன் காண்; நேசன் காண், நினைவோர்க்கு எல்லாம்,
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண்; மாலொடு
                அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரி சுடர் ஆய் ஓங்கினான் காண் விண் இழி
                              தண் வீழிமிழலையானே.
உரை
   
529ஈங்கைப் பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண்; எம்மான்காண்;
                      கைம்மாவின் உரி போர்த்தான் காண்;
ஓங்கு மலைக்கு அரையன் தன் பாவையோடும் ஓர் உரு ஆய்
                        நின்றான் காண்; ஓங்காரன் காண்;
கோங்கு மலர்க்கொன்றை அம்தார்க் கண்ணியான் காண்;
          கொல் ஏறு வெல் கொடிமேல் கூட்டினான் காண்;
வேங்கை வரிப் புலித்தோல் மேல் ஆடையான் காண் விண்
                           இழி தண் வீழிமிழலையானே.
உரை