6.53 திருவீழிமிழலை
திருத்தாண்டகம்
530மான் ஏறு கரம் உடைய வரதர் போலும்; மால்வரை கால்
                  வளை வில்லா வளைத்தார் போலும்;
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும்; கட்டங்கம், கொடி,
                     துடி, கைக் கொண்டார் போலும்;
தேன் ஏறு திரு இதழித்தாரார் போலும்; திருவீழிமிழலை
                           அமர் செல்வர் போலும்;
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை
                       ஆள் உடைய அடிகள் தாமே.
உரை
   
531சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால்
                           பிளப்பித்த சதுரர் போலும்;
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும்; நாரணனை
                   இடப்பாகத்து அடைத்தார் போலும்;
குமரனையும் மகன் ஆக உடையார் போலும்; குளிர்
                   வீழிமிழலை அமர் குழகர் போலும்;
அமரர்கள் பின் அமுது உண, நஞ்சு உண்டார் போலும்
             அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
உரை
   
532நீறு அணிந்த திருமேனி நிமலர் போலும்; நேமி, நெடுமாற்கு,
                           அருளிச் செய்தார் போலும்;
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும்; எயில்
                மூன்றும் எரிசரத்தால் எய்தார் போலும்;
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும்; வியன்
                 வீழிமிழலை உறை விகிர்தர் போலும்;
ஆறு அணிந்த சடா மகுடத்து அழகர் போலும்
           அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
உரை
   
533கை வேழ முகத்தவனைப் படைத்தார் போலும்; கயாசுரனை
                     அவனால் கொல்வித்தார் போலும்;
செய் வேள்வித் தக்கனை முன் சிதைத்தார் போலும்; திசை
           முகன் தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும்;
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும்; வியன்
               வீழிமிழலை இடம் கொண்டார் போலும்;
ஐவேள்வி, ஆறு அங்கம், ஆனார் போலும் அடியேனை
                       ஆள் உடைய அடிகள் தாமே.
உரை
   
534துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும்; சுடர்
                  மூன்றும் சோதியும் ஆய்த் யார் போலும்;
பொன் ஒத்த திருமேனிப் புனிதர் போலும்; பூதகணம் புடை
                  சூழ வருவார் போலும்;
மின் ஒத்த செஞ்சடை வெண்பிறையார் போலும்; வியன்
                  வீழிமிழலை சேர் விமலர் போலும்;
அன்னத்தேர் அயன் முடி சேர் அடிகள் போலும்
                  அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
உரை
   
535மாலாலும் அறிவு அரிய வரதர் போலும்; மறவாதார் பிறப்பு
                           அறுக்க வல்லார் போலும்;
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும்; நாம
                  எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்;
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும்;
            வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும்
             அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
உரை
   
536பஞ்சு அடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்; பைந்நாகம்
                  அரைக்கு அசைத்த பரமர் போலும்;
மஞ்சு அடுத்த மணி நீல கண்டர் போலும்; வட கயிலை
                    மலை உடைய மணாளர் போலும்;
செஞ்சடைக்கண் வெண் பிறை கொண்டு அணிந்தார்
    போலும்; திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும்;
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும்
          அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
உரை
   
537குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும்;
         குடமூக்கில் இடம் ஆக்கிக் கொண்டார் போலும்;
புண்டரிகப் புதுமலர் ஆதனத்தார் போலும்; புள் அரசைக்
               கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும்;
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும்;
             வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும்;
அண்டத்து உப் புறத்து அப்பால் ஆனார் போலும்
              அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
உரை
   
538முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும்; மொய்
              பவளக்கொடி அனைய சடையார் போலும்;
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும்;
            இரு-நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்;
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும்; வியன்
                  வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும்
             அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
உரை
   
539கரி உரி செய்து உமை வெருவக் கண்டார் போலும்;
        கங்கையையும் செஞ்சடை மேல் கரந்தார் போலும்;
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும்;
               ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும்;
விரி கதிரோர் இருவரை முன் வெகுண்டார் போலும்;
              வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும்;
அரி பிரமர் துதி செய நின்று அளித்தார் போலும்
              அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
உரை
   
540கயிலாயமலை எடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்து
                             அருளிச்செய்தார் போலும்;
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்து
                          ஆட வல்ல குழகர் போலும்;
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும்; வியன்
                   வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
அயில் ஆய மூ இலைவேல் படையார் போலும் அடியேனை
                          ஆள் உடைய அடிகள் தாமே.
உரை