6.58 திருவலம்புரம்
திருத்தாண்டகம்
581மண் அளந்த மணி வண்ணர் தாமும், மற்றை
           மறையவனும், வானவரும், சூழ நின்று
கண் மலிந்த திரு நெற்றி உடையார்; ஒற்றைக்
      கத நாகம் கை உடையார்; காணீர் அன்றே?
பண் மலிந்த மொழியவரும், யானும், எல்லாம்
    பணிந்து இறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல,
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி
         வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
உரை
   
582சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த
      தீவண்ணர்; சிறந்து இமையோர் இறைஞ்சி ஏத்த,
கொலை நவின்ற களியானை உரிவை போர்த்து,
          கூத்து ஆடி, திரிதரும் அக் கூத்தர்; நல்ல
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண, கடு
             விடை மேல், பாரிடங்கள் சூழ, காதல்
மலை மகளும் கங்கையும் தாமும் எல்லாம்
           வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
உரை
   
583தீக் கூரும் திருமேனி ஒரு பால், மற்றை ஒருபாலும்
                 அரி உருவம் திகழ்ந்த செல்வர்;
ஆக்கூரில்-தான் தோன்றி புகுவார் போல,
    அருவினையேன் செல்வதுமே, அப்பால் எங்கும்
நோக்கார், ஒரு இடத்தும்; நூலும் தோலும் துதைந்து
            இலங்கும் திருமேனி வெண் நீறு ஆடி,
வாக்கால் மறை விரித்து, மாயம் பேசி, வலம்புரமே
                    புக்கு, அங்கே மன்னினாரே.
உரை
   
584மூவாத மூக்கப் பாம்பு அரையில் சாத்தி மூவர்
                உரு ஆய முதல்வர்; இந் நாள்
கோவாத எரிகணையைச் சிலைமேல் கோத்த
        குழகனார்; குளிர்கொன்றை சூடி இங்கே
போவாரைக் கண்டு அடியேன் பின்பின் செல்ல,
           புறக்கணித்து, தம்முடைய பூதம் சூழ,
“வா வா!” என உரைத்து, மாயம் பேசி,
        வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே.
உரை
   
585அனல் ஒரு கையது ஏந்தி, அதளினோடே
           ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி,
புனல் பொதிந்த சடைக்கற்றைப் பொன் போல்
    மேனிப் புனிதனார், புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த,
சின விடையை மேற்கொண்டு, திரு ஆரூரும்
         சிரபுரமும் இடை மருதும் சேர்வார் போல,
மனம் உருக, வளை கழல, மாயம் பேசி,
           வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
உரை
   
586கறுத்தது ஒரு கண்டத்தர்; காலன் வீழக் காலினால்
                  காய்ந்து உகந்த காபாலி(ய்)யார்;
முறித்தது ஒரு தோல் உடுத்து, முண்டம் சாத்தி,
       முனி கணங்கள் புடை சூழ, முற்றம் தோறும்
தெறித்தது ஒரு வீணையராய்ச் செல்வார்; தம்
   வாய்ச் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ,
மறித்து ஒரு கால் நோக்காதே, மாயம் பேசி,
           வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
உரை
   
587பட்டு உடுத்து, பவளம் போல் மேனி எல்லாம்
     பசுஞ்சாந்தம் கொண்டு அணிந்து, பாதம் நோவ
இட்டு எடுத்து நடம் ஆடி, இங்கே வந்தார்க்கு,
      “எவ் ஊரீர், எம்பெருமான்?” என்றேன்; ஆவி
விட்டிடும் ஆறு அது செய்து, விரைந்து நோக்கி,
              வேறு ஓர் பதி புகப் போவார் போல,
வட்டணைகள் பட நடந்து, மாயம் பேசி,
           வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
உரை
   
588“பல்லார் பயில் பழனப் பாசூர்” என்று, பழனம்
                பதி பழைமை சொல்லி நின்றார்;
“நல்லார் நனி பள்ளி இன்று வைகி, நாளைப் போய்,
                   நள்ளாறு சேர்தும்” என்றார்;
சொல்லார், ஒரு இடமா; தோள் கை வீசி, சுந்தரராய்,
                     வெந்த நீறு ஆடி, எங்கும்
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி
         வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
உரை
   
589பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு, போர்
                  வெண்மழு ஏந்தி, போகா நிற்பர்;
தங்கார் ஒரு இடத்தும், தம்மேல் ஆர்வம் தவிர்த்து
         அருளார்; “தத்துவத்தே நின்றேன்” என்பர்;
எங்கே இவர் செய்கை? ஒன்று ஒன்று ஒவ்வா; என்
           கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி,
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே
                     புக்கு, அங்கே மன்னினாரே.
உரை
   
590செங்கண் மால் சிலை பிடித்து, சேனையோடும்
           சேதுபந்தனம் செய்து, சென்று புக்கு,
பொங்கு போர் பல செய்து, புகலால் வென்ற போர்
      அரக்கன் நெடு முடிகள் பொடி ஆய் வீழ,
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி,
   அடர்த்து, அவற்கே அருள் புரிந்த அடிகள், இந் நாள்
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி
        வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே.
உரை