6.62 திருஆனைக்கா
திருத்தாண்டகம்
620எத் தாயர், எத் தந்தை, எச் சுற்றத்தார், எம் மாடு
                        சும்மாடு? ஏவர் நல்லார்?
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை; சிறு
              விறகால்-தீ மூட்டிச் செல்லா நிற்பர்;
சித்து ஆய வேடத்தாய்! நீடு பொன்னித் திரு
           ஆனைக்கா உடைய செல்வா! என்தன்
அத்தா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
   அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
உரை
   
621ஊன் ஆகி, உயிர் ஆகி, அதனுள் நின்ற உணர்வு
           ஆகி, பிற அனைத்தும் நீயாய், நின்றாய்;
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து, நல்லனவும்
                      தீயனவும் காட்டா நின்றாய்;
தேன் ஆரும் கொன்றையனே! நின்றியூராய்! திரு
           ஆனைக்காவில் உறை சிவனே! ஞானம்-
ஆனாய்! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
    அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
உரை
   
622ஒப்பு ஆய், இவ் உலகத்தோடு ஒட்டி வாழ்வான்,
       ஒன்று அலாத் தவத்தாரோடு உடனே நின்று,
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி, நற்று உன்
         திறம் மறந்து திரிவேனை, காத்து, நீ வந்து
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி, என்னை
     ஆண்டவனே! எழில் ஆனைக்காவா! வானோர்
அப்பா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
   அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
உரை
   
623நினைத்தவர்கள் நெஞ்சுளாய்! வஞ்சக் கள்வா! நிறை
      மதியம் சடை வைத்தாய்! அடையாது உன்பால்
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரியச் செற்றாய்! முன்
       ஆனைத் தோல் போர்த்த முதல்வா! என்றும்
கனைத்து வரும் எருது ஏறும் காளகண்டா!
          கயிலாயமலையா! நின் கழலே சேர்ந்தேன்;
அனைத்து உலகும் ஆள்வானே! ஆனைக்காவா!
   அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
உரை
   
624இம் மாயப் பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து-
   இடைச் சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம்,
கைம் மான, மனத்து உதவி, கருணை செய்து, காதல்
             அருள் அவை வைத்தாய்! காண நில்லாய்!
வெம் மான மதகரியின் உரிவை போர்த்த
               வேதியனே! தென் ஆனைக்காவுள் மேய
அம்மான்! நின் பொன் பாதம் அடையப்பெற்றால்,
   அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
உரை
   
625உரை ஆரும் புகழானே! ஒற்றியூராய்! கச்சி
                    ஏகம்பனே! காரோணத்தாய்!
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார் பால்
    மிக்கானே! அக்கு, அரவம், ஆரம், பூண்டாய்!
திரை ஆரும் புனல் பொன்னித் தீர்த்தம் மல்கு
    திரு ஆனைக்காவில் உறை தேனே! வானோர்-
அரையா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
   அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
உரை
   
626மை ஆரும் மணிமிடற்றாய்! மாது ஓர் கூறாய்!
        மான்மறியும், மா மழுவும், அனலும், ஏந்தும்
கையானே! காலன் உடல் மாளச் செற்ற கங்காளா!
               முன் கோளும் விளைவும் ஆனாய்!
செய்யானே, திருமேனி! அரியாய்! தேவர்-குலக்
          கொழுந்தே! தென் ஆனைக்காவுள் மேய
ஐயா! உன் பொன்பாதம் அடையப்பெற்றால்,
   அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
உரை
   
627இலை ஆரும் சூலத்தாய்! எண் தோளானே! “எவ்
             இடத்தும் நீ அலாது இல்லை” என்று
தலை ஆரக் கும்பிடுவார் தன்மையானே! தழல்
                மடுத்த மா மேரு, கையில் வைத்த,
சிலையானே! திரு ஆனைக்காவுள் மேய தீஆடீ!
                 சிறு நோயால் நலிவுண்டு உள்ளம்
அலையாதே, நின் அடியே அடையப்பெற்றால்,
   அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
உரை
   
628விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய்! வேத-
          நெறியானே! எறிகடலின் நஞ்சம் உண்டாய்!
எண் ஆரும் புகழானே! உன்னை, “எம்மான்!” என்று
            என்றே நாவினில் எப்பொழுதும் உன்னி,
கண் ஆரக் கண்டிருக்கக் களித்து, எப்போதும்,
       கடிபொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய
அண்ணா! நின் பொன்பாதம் அடையப் பெற்றால்,
     அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
உரை
   
629கொடி ஏயும் வெள் ஏற்றாய்! கூளி பாட, குறள் பூதம்
                         கூத்து ஆட, நீயும் ஆடி,
வடிவு ஏயும் மங்கை தனை வைத்த மைந்தா! மதில்
                 ஆனைக்கா உளாய்! மாகாளத்தாய்!
படி ஏயும் கடல் இலங்கைக் கோமான் தன்னைப்
       பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த
அடியே வந்து, அடைந்து, அடிமை ஆகப் பெற்றால்,
     அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
உரை