6.63 திருஆனைக்கா
திருத்தாண்டகம்
630முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி தன்னை;
               மூவாத சிந்தையே, மனமே, வாக்கே,
தன் ஆனையாய் பண்ணி ஏறினானை; சார்தற்கு
                      அரியானை; தாதை தன்னை;
என் ஆனைக்கன்றினை; என் ஈசன் தன்னை;
              எறி நீர்த் திரை உகளும் காவிரீ சூழ்
தென் ஆனைக்காவானை; தேனை; பாலை;
            செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.
உரை
   
631மருந்தானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வளர்
     மதி அம் சடையானை, மகிழ்ந்து என் உள்ளத்து
இருந்தானை, இறப்பு இலியை, பிறப்பு இலானை,
    இமையவர் தம் பெருமானை, உமையாள் அஞ்சக்
கருந் தான-மதகளிற்றின் உரி போர்த்தானை, கன
     மழுவாள் படையானை, பலி கொண்டு ஊர் ஊர்
திரிந்தானை, திரு ஆனைக்கா உளானை,
            செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
உரை
   
632முற்றாத வெண்திங்கள் கண்ணியானை, முந்நீர் நஞ்சு
             உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும்
உற்றானை, பல் உயிர்க்கும் துணை ஆனானை,
         ஓங்காரத்து உள்பொருளை, உலகம் எல்லாம்
பெற்றானை, பின் இறக்கம் செய்வான் தன்னை,
       “பிரான்” என்று போற்றாதார் புரங்கள் மூன்றும்
செற்றானை, திரு ஆனைக்கா உளானை,
             செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
உரை
   
633கார் ஆரும் கறை மிடற்று எம் பெருமான் தன்னை,
     காதில் வெண் குழையானை, கமழ் பூங்கொன்றைத்-
தாரானை, புலி அதளின் ஆடையானை, தான் அன்றி
                     வேறு ஒன்றும் இல்லா ஞானப்
பேரானை, மணி ஆரம் மார்பினானை, பிஞ்ஞகனை,
                      தெய்வ நால்மறைகள் பூண்ட
தேரானை, திரு ஆனைக்கா உளானை,
              செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
உரை
   
634பொய் ஏதும் இல்லாத மெய்யன் தன்னை,
        புண்ணியனை, நண்ணாதார் புரம் நீறு ஆக
எய்தானை, செய் தவத்தின் மிக்கான் தன்னை, ஏறு
          அமரும் பெருமானை, இடம் மான் ஏந்து
கையானை, கங்காள வேடத்தானை, கட்டங்கக்
              கொடியானை, கனல் போல் மேனிச்
செய்யானை, திரு ஆனைக்கா உளானை,
           செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
உரை
   
635கலையானை, பரசு தர பாணியானை, கன
                வயிரத்திரளானை, மணி மாணிக்க-
மலையானை, என் தலையின் உச்சியானை, வார்தரு
               புன்சடையானை, மயானம் மன்னும்
நிலையானை, வரி அரவு நாணாக் கோத்து
        நினையாதார் புரம் எரிய வளைத்த மேருச்-
சிலையானை, திரு ஆனைக்கா உளானை,
           செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
உரை
   
636ஆதியனை, எறி மணியின் ஓசையானை,
    அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க
சோதியனை, தூ மறையின் பொருளான் தன்னை,
   சுரும்பு அமரும் மலர்க்கொன்றை தொல்-நூல் பூண்ட
வேதியனை, அறம் உரைத்த பட்டன் தன்னை,
       விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றைச்
சேதியனை, திரு ஆனைக்கா உளானை,
               செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
உரை
   
637மகிழ்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, மறவாது
                கழல் நினைந்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பானை, பூத
           கணப்படையானை, புறங்காட்டு ஆடல்
உகந்தானை, பிச்சையே இச்சிப்பானை, ஒண்
             பவளத்திரளை, என் உள்ளத்துள்ளே
திகழ்ந்தானை, திரு ஆனைக்கா உளானை,
          செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.
உரை
   
638நசையானை; நால்வேதத்து அப்பாலானை; நல்குரவும்,
               தீப்பிணி நோய், காப்பான் தன்னை;
இசையானை; எண் இறந்த குணத்தான் தன்னை;
       இடை மருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின்
மிசையானை; விரிகடலும், மண்ணும், விண்ணும், மிகு
           தீயும், புனல், எறி காற்று, ஆகி எட்டுத்-
திசையானை; திரு ஆனைக்கா உளானை;
           செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.
உரை
   
639பார்த்தானை, காமன் உடல் பொடிஆய் வீழ; பண்டு
         அயன், மால், இருவர்க்கும் அறியா வண்ணம்
சீர்த்தானை; செந்தழல் போல் உருவினானை; தேவர்கள்
                  தம் பெருமானை; திறம் உன்னாதே
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை
        எலாம் கெடுத்து, அவன் தன் இடர் அப்போதே
தீர்த்தானை; திரு ஆனைக்கா உளானை;
              செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.
உரை