தொடக்கம் |
|
|
6.82 திருச்சாய்க்காடு திருத்தாண்டகம் |
813 | வானத்து இளமதியும் பாம்பும் தன்னில் வளர் சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும்; தேனைத் திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும்; ஞானத்தின் ஒண் சுடர் ஆய் நின்றார் போலும்; நன்மையும் தீமையும் ஆனார் போலும்; தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. |
|
உரை
|
|
|
|
|
814 | விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும்; வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்; அண்ணாமலை உறையும் அண்ணல் போலும்; அதியரைய மங்கை அமர்ந்தார் போலும்; பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும் திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண்நீர்த் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. |
|
உரை
|
|
|
|
|
815 | கான் இரிய வேழம் உரித்தார் போலும்; காவிரிப் பூம்பட்டினத்து உள்ளார் போலும்; வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும்; வட கயிலை மலை அது தம் இருக்கை போலும்; ஊன் இரியத் தலை கலனா உடையார் போலும்; உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும் தேன் இரிய மீன் பாயும் தெண்நீர்ப் பொய்கைத் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. |
|
உரை
|
|
|
|
|
816 | ஊன் உற்ற வெண்தலை சேர் கையர்போலும்; ஊழி பல கண்டு இருந்தார் போலும்; மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்; மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்; கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும் தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. |
|
உரை
|
|
|
|
|
817 | கார் மல்கு கொன்றை அம்தாரார் போலும்; காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்; பார் மல்கி ஏத்தப்படுவார் போலும்; பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும்; ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும்; ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்; சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. |
|
உரை
|
|
|
|
|
818 | மா வாய் பிளந்து உகந்த மாலும், செய்ய- மலரவனும், தாமேயாய் நின்றார் போலும்; மூவாத மேனி முதல்வர் போலும்; முதுகுன்றமூதூர் உடையார் போலும்; கோ ஆய முனிதன்மேல் வந்த கூற்றைக் குரை கழலால், அன்று, குமைத்தார் போலும்; தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. |
|
உரை
|
|
|
|
|
819 | கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும்; காரோணத்து என்றும் இருப்பார் போலும்; இடி குரல் வாய்ப் பூதப்படையார் போலும்; ஏகம்பம் மேவி இருந்தார் போலும்; படி ஒருவர் இல்லாப் படியார் போலும்; பாண்டிக்கொடு முடியும் தம் ஊர் போலும்; செடி படு நோய் அடியாரைத் தீர்ப்பார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. |
|
உரை
|
|
|
|
|
820 | விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும்; வெண்நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்; மலையினார் மங்கை மணாளர் போலும்; மாற்பேறு காப்பு ஆய் மகிழ்ந்தார் போலும்; தொலைவு இலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும்; சோற்றுத்துறை, துருத்தி, உள்ளார் போலும்; சிலையின் ஆர் செங்கண் அரவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. |
|
உரை
|
|
|
|
|
821 | அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும்; அமருலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சிபோலும்; நல்லமும் நல்லூரும் மேயார் போலும்; நள்ளாறு நாளும் பிரியார் போலும்; முல்லை முகை நகையாள் பாகர் போலும்; முன்னமே தோன்றி முளைத்தார் போலும்; தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. |
|
உரை
|
|
|
|
|
822 | உறைப்பு உடைய இராவணன் பொன்மலையைக் கையால் ஊக்கம் செய்து எடுத்தலுமே, உமையாள் அஞ்ச, நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர, விரல் வைத்த நிமலர் போலும்; பிறைப்பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும்; பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும்; சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திருச் சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே. |
|
உரை
|
|
|
|