6.84 திருச்செங்காட்டங்குடி
திருத்தாண்டகம்
833பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,
         பேணி நினைந்து எழுவார் தம் மனத்தே மன்னி
இருந்த மணி விளக்கு அதனை, நின்ற பூமேல்
              எழுந்தருளி இருந்தானை, எண்தோள் வீசி
அருந் திறல் மாநடம் ஆடும் அம்மான் தன்னை,
        அம் கனகச்சுடர்க் குன்றை, அன்று ஆலின்கீழ்த்
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள் செய்தானை,
           செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
உரை
   
834துங்க நகத்தால் அன்றித் தொலையா வென்றித்
       தொகு திறல் அவ் இரணியனை ஆகம் கீண்ட
அம் கனகத்திருமாலும், அயனும், தேடும் ஆர்
      அழலை; அநங்கன் உடல் பொடி ஆய் வீழ்ந்து
மங்க, நகத் தான் வல்ல மருந்து தன்னை; வண்
                கயிலை மாமலைமேல் மன்னி நின்ற,
செங்கனகத்திரள் தோள், எம் செல்வன் தன்னை;
        செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
உரை
   
835உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை,
       உம்பர் மணி முடிக்கு அணியை, உண்மை நின்ற
பெருகு நிலைக் குறியாளர் அறிவு தன்னை, பேணிய
             அந்தணர்க்கு மறைப்பொருளை, பின்னும்
முருகு விரி நறுமலர் மேல் அயற்கும் மாற்கும்
   முழுமுதலை, மெய்த் தவத்தோர் துணையை, வாய்த்த
திருகுகுழல் உமை நங்கை பங்கன் தன்னை,
         செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
உரை
   
836கந்த மலர்க் கொன்றை அணி சடையான் தன்னை;
              கதிர்விடு மா மணி பிறங்கு கனகச்சோதிச்
சந்த மலர்த் தெரிவை ஒரு பாகத்தானை; சராசர
                    நல்-தாயானை; நாயேன் முன்னைப்
பந்தம் அறுத்து, ஆள் ஆக்கி, பணி கொண்டு,
     ஆங்கே பன்னிய நூல்-தமிழ்மாலை பாடுவித்து, என்
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை;
           செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
உரை
   
837நஞ்சு அடைந்த கண்டத்து நாதன் தன்னை,
          நளிர்மலர்ப்-பூங்கணை வேளை நாசம் ஆக
வெஞ்சினத்தீ விழித்தது ஒரு நயனத்தானை,
               வியன்கெடில வீரட்டம் மேவினானை,
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில்
           ஆரூர் இடம் கொண்ட மைந்தன் தன்னை,
செஞ் சினத்த திரிசூலப்படையான் தன்னை,
        செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
உரை
   
838கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான் தன்னை,
                   கடவூரில் வீரட்டம் கருதினானை,
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன் தன்னை,
           பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை,
பன்னிய நால்மறை விரிக்கும் பண்பன் தன்னை,
   பரிந்து இமையோர் தொழுது ஏத்தி, “பரனே!” என்று
சென்னிமிசைக்கொண்டு அணி சேவடியினானை,
         செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
உரை
   
839எத்திக்கும் ஆய் நின்ற இறைவன் தன்னை; ஏகம்பம்
                       மேயானை; இல்லாத் தெய்வம்
பொத்தித் தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில்
                புக்கு அழுந்தி வீழாமே, போத வாங்கி,
பத்திக்கே வழி காட்டி, பாவம் தீர்த்து, பண்டை
                வினைப் பயம் ஆன எல்லாம் போக்கி,
தித்தித்து, என் மனத்துள்ளே ஊறும் தேனை;
           செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
உரை
   
840கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னை;
                 கற்றார்கள் உற்று ஓரும் காதலானை;
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும்
      பொன்றி விழ, அன்று, பொரு சரம் தொட்டானை;
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க, நிறை
            தவத்தை அடியேற்கு நிறைவித்து, என்றும்
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை;
         செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
உரை
   
841அரிய பெரும் பொருள் ஆகி நின்றான் தன்னை;
              அலைகடலில் ஆலாலம் அமுது செய்த
கரியது ஒரு கண்டத்து, செங்கண் ஏற்று, கதிர்
                  விடு மா மணி பிறங்கு காட்சியானை;
உரிய பல தொழில் செய்யும் அடியார் தங்கட்கு
    உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பு இலானை;
தெரிவை ஒருபாகத்துச் சேர்த்தினானை;
          செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
உரை
   
842போர் அரவம் மால்விடை ஒன்று ஊர்தியானை,
              புறம் பயமும் புகலூரும் மன்னினானை,
நீர் அரவச் செஞ்சடை மேல் நிலா வெண்திங்கள்
            நீங்காமை வைத்தானை, நிமலன் தன்னை,
பேர் அரவப் புட்பகத்தேர் உடைய வென்றிப்
     பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடியச் செற்ற
சீர் அரவக் கழலானை, செல்வன் தன்னை,
        செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
உரை