6.87 திருச்சிவபுரம்
திருத்தாண்டகம்
861வானவன் காண்; வானவர்க்கும் மேல் ஆனான் காண்;
          வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்; ஆன் ஐந்தும் ஆடினான் காண்; ஐயன்
                    காண்; கையில் அனல் ஏந்தி ஆடும்
கானவன் காண்; கானவனுக்கு அருள் செய்தான் காண்;
                  கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும்
தேன் அவன் காண்; சென்று அடையாச் செல்வன் தான் காண்;
        சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
உரை
   
862நக்கன் காண்; நக்க(அ)ரவம் அரையில் ஆர்த்த நாதன் காண்;
                                 பூதகணம் ஆட ஆடும்
சொக்கன் காண்; கொக்கு இறகு சூடினான் காண்; துடி
         இடையாள் துணை முலைக்குச் சேர்வு அது ஆகும்
பொக்கன் காண்; பொக்கணத்த வெண்நீற்றான் காண்;
            புவனங்கள் மூன்றினுக்கும் பொருள் ஆய் நின்ற
திக்கன் காண்; செக்கர் அது திகழும் மேனிச் சிவன் அவன்
                   காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
உரை
   
863வம்பின் மலர்க்குழல் உமையாள் மணவாளன் காண்;
     மலரவன், மால், காண்பு அரிய மைந்தன் தான் காண்;
கம்ப மதக்கரி பிளிற உரி செய்தோன் காண்; கடல்
          நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண்;
அம்பர் நகர்ப் பெருங்கோயில் அமர்கின்றான் காண்;
             அயவந்தி உள்ளான் காண்; ஐயாறன் காண்;
செம்பொன் எனத் திகழ்கின்ற உருவத்தான் காண்;
    சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
உரை
   
864பித்தன் காண்; தக்கன் தன் வேள்வி எல்லாம் பீடு அழியச் சாடி,
                                       அருள்கள் செய்த
முத்தன் காண்; முத்தீயும் ஆயினான் காண்; முனிவர்க்கும்
                          வானவர்க்கும் முதல் ஆய் மிக்க
அத்தன் காண்; புத்தூரில் அமர்ந்தான் தான் காண்; அரிசில்
                          பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன் காண்; சித்தீச்சுரத்தான் தான் காண்; சிவன் அவன்
                     காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
உரை
   
865தூயவன் காண்; நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய
                                       சோதியான் காண்;
தீ அவன் காண்; தீ அவுணர் புரம் செற்றான் காண்; சிறுமான்
                 கொள் செங்கை எம்பெருமான் தான் காண்;
ஆயவன் காண்; ஆரூரில் அம்மான் தான் காண்; அடியார்கட்கு
                           ஆர் அமுதம் ஆயினான் காண்;
சேயவன் காண்; சேமநெறி ஆயினான் காண்; சிவன் அவன்
                     காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
உரை
   
866பார் அவன் காண்; பார் அதனில் பயிர் ஆனான் காண்; பயிர்
             வளர்க்கும் துளி அவன் காண்; துளியில் நின்ற
நீர் அவன் காண்; நீர் சடைமேல் நிகழ்வித்தான் காண்; நில
                வேந்தர் பரிசு ஆக நினைவு உற்று ஓங்கும்
பேரவன் காண்; பிறை எயிற்று வெள்ளைப் பன்றி பிரியாது,
                           பலநாளும் வழிபட்டு, ஏத்தும்
சீரவன் காண்; சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன்
                   காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
உரை
   
867வெய்யவன் காண்; வெய்ய கனல் ஏந்தினான் காண்; வியன்
                    கெடில வீரட்டம் மேவினான் காண்;
மெய்யவன் காண்; பொய்யர் மனம் விரவாதான் காண்;
               வீணையோடு இசைந்து மிகு பாடல் மிக்க
கையவன் காண்; கையில் மழு ஏந்தினான் காண்; காமன்
             அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண்;
செய்யவன் காண்; செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன்
           அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
உரை
   
868கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண்; கலை பயிலும்
                        கருத்தன் காண்; திருத்தம் ஆகி,
மலை ஆகி, மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி, விண்
                           ஆகி, நின்றான் தான் காண்;
தலை ஆய மலை எடுத்த தகவு இலோனைத் தகர்ந்து விழ,
                        ஒரு விரலால் சாதித்து, ஆண்ட
சிலை ஆரும் மடமகள் ஓர் கூறன் தான் காண்; சிவன்
           அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.
உரை