6.89 திருஇன்னம்பர்
திருத்தாண்டகம்
878அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்பு உடையர்
                            சிந்தை அகலார் போலும்;
சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழி
                         காட்டும் தொழிலார் போலும்;
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும்; வீங்கு இருளும்
                      நல் வெளியும் ஆனார் போலும்;
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர்த் தான்
                                 தோன்றி ஈசனாரே.
உரை
   
879கோழிக் கொடியோன் தன் தாதைபோலும்; கொம்பனாள் பாகம்
                                    குளிர்ந்தார் போலும்;
ஊழி முதல்வரும் தாமே போலும்; உள்குவார் உள்ளத்தின்
                                     உள்ளார் போலும்;
ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்; அடைந்தவர்கட்கு
                            அன்பராய் நின்றார் போலும்;
ஏழு பிறவிக்கும் தாமேபோலும் இன்னம்பர்த் தான் தோன்றி
                                            ஈசனாரே.
உரை
   
880தொண்டர்கள் தம் தகவின் உள்ளார் போலும்; தூநெறிக்கும் தூ
                             நெறி ஆய் நின்றார் போலும்;
பண்டு இருவர் காணாப் படியார் போலும்; பத்தர்கள் தம்
                             சித்தத்து இருந்தார் போலும்;
கண்டம் இறையே கறுத்தார் போலும்; காமனையும் காலனையும்
                                    காய்ந்தார் போலும்;
இண்டைச் சடை சேர் முடியார் போலும் இன்னம்பர்த் தான்
                                    தோன்றி ஈசனாரே.
உரை
   
881வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை வளர் சடை மேல்
                     வைத்து உகந்த மைந்தர் போலும்;
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும்; ஒளி நீறு
                              பூசும் ஒருவர் போலும்;
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்; தம்மின் பிறர்
                          பெரியார் இல்லை போலும்;
ஏனத்து எயிறு இலங்கப் பூண்டார் போலும் இன்னம்பர்த்
                            தான் தோன்றி ஈசனாரே.
உரை
   
882சூழும் துயரம் அறுப்பார் போலும்; தோற்றம் இறுதி ஆய்
                                  நின்றார் போலும்;
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும்; ஆடல் உகந்த
                                  அழகர் போலும்;
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு, தன்மை 
                         அளித்த தலைவர் போலும்;
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர்த் தான்
                                தோன்றி ஈசனாரே.
உரை
   
883பாதத்து அணையும் சிலம்பர் போலும்; பார் ஊர் விடை ஒன்று
                                     உடையார் போலும்;
பூதப்படை ஆள் புனிதர் போலும்; பூம் புகலூர் மேய புராணர்
                                              போலும்;
வேதப் பொருள் ஆய் விளைவார் போலும்; வேடம் பரவித்
                                      திரியும் தொண்டர்
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர்த் தான்
                                      தோன்றி ஈசனாரே.
உரை
   
884பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும்; பத்தர்கள் தம்
                         சித்தத்து இருந்தார் போலும்;
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும்; கற்றவர்கள்
                           ஏதம் களைவார் போலும்;
பொல்லாத பூதப்படையார் போலும்; பொருகடலும்
                        ஏழ்மலையும் தாமே போலும்;
எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும் இன்னம்பர்த் தான்
                                தோன்றி ஈசனாரே.
உரை
   
885மட்டு மலியும் சடையார் போலும்; மாதை ஓர் பாகம் உடையார்
                                              போலும்;
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்; காலன் தன் வாழ்நாள்
                                     கழிப்பார் போலும்;
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும்; ஞாலம், எரி, நீர்,
                           வெளி, கால், ஆனார் போலும்;
எட்டுத் திசைகளும் தாமே போலும் இன்னம்பர்த் தான்
                                     தோன்றி ஈசனாரே.
உரை
   
886கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து,
                           அளித்த கள்வர் போலும்;
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும்; தேவர்க்கும்
                     தேவர் ஆம் செல்வர் போலும்;
மருவில் பிரியாத மைந்தர் போலும்; மலர் அடிகள் நாடி
                                 வணங்கல் உற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர்த்
                          தான் தோன்றி ஈசனாரே.
உரை
   
887அலங்கல் சடை தாழ, ஐயம் ஏற்று(வ்), அரவம் அரை ஆர்க்க
                                      வல்லார் போலும்;
வலங்கை மழு ஒன்று உடையார் போலும்; வான் தக்கன்
                            வேள்வி சிதைத்தார் போலும்;
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து,
                   மெய்ஞ்ஞரம்பால் கீதம் கேட்டு, அன்று,
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர்த் தான்
                                     தோன்றி ஈசனாரே.
உரை